“ஒரு இனத்தின் அரசாக செயல்பட நம்மை ஆளாக்கிய பெருந்தகை” - அண்ணா பிறந்தநாள்; முதல்வர் ட்வீட்

By செய்திப்பிரிவு

சென்னை: “ஒரு இனத்தின் அரசாகச் செயல்பட நம்மை ஆளாக்கிய பேரறிஞர் பெருந்தகை அண்ணாவைப் போற்றி வணங்குகிறேன்” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்ணாவின் பிறந்தநாளில் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில். “75 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகம் இந்தச் சமூகத்தில் மாற்றங்கள் பல ஏற்படுத்தி, தலைசிறந்த தமிழ்நாடாக நாம் தலைநிமிர்ந்து நடைபோட வித்திட்டவர் நம் பேரறிஞர் அண்ணா!

தலைவர் கலைஞர் தன் இறுதி மூச்சிலும் “அண்ணா… அண்ணா…” என்றே பேசினார்; எழுதினார். அத்தகைய உணர்வுப்பூர்வமான தம்பிமார்களைப் பெற்ற ஒப்பற்ற பெருமகன்!

ஒரு இனத்தின் அரசாகச் செயல்பட நம்மை ஆளாக்கிய பேரறிஞர் பெருந்தகை அண்ணாவைப் போற்றி வணங்குகிறேன்!” எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, அண்ணாவின் 116-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்பாலு, அமைச்சர்கள் பொன்முடி, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, த.மோ.அன்பரசன், கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இருந்தனர். எம்.பி.க்கள் கனிமொழி, தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி ஆகியோரும் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE