தமிழகம் முழுவதும் தேசிய மக்கள் நீதிமன்றம் ரூ.682 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு: 69,212 நிலுவை வழக்குகளுக்கு தீர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்) 69,212 நிலுவை வழக்குகளுக்கு தீர்வு எட்டப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் ரூ.682 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் நடப்பாண்டுக்கான 3-வது தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. உயர் நீதிமன்றத்தில் 6 அமர்வுகளும், மதுரை கிளையில் 3 அமர்வுகளும் நடைபெற்றன.

சென்னை உயர் நீதிமன்றத்தில் 1,022 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 149 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. அதன் மூலம் ரூ.18.85 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது. மதுரை அமர்வில் 356 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 30 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மொத்தம் ரூ.4 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.

மோட்டார் வாகன விபத்து தடுப்பு சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், விழுப்புரம் மண்டல போக்குவரத்துக் கழகத்துக்கும், விபத்தில் காலை இழந்தவருக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டு, ரூ.35 லட்சம் வழங்கப்பட்டது.

அதேபோல, மற்றொரு சாலை விபத்து வழக்கில் பாதிக்கப்பட்டவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, ரூ.88 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. இன்னொரு விபத்தில் உயிரிழந்த கட்டிடப் பொறியாளரின் மனைவிக்கு ரூ.2.35 கோடி வழங்கப்பட்டது.

மேலும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுக்கள், தாலுகா சட்டப் பணிகள் ஆணைக் குழுக்கள் சார்பில் நடைபெற்ற 475 அமர்வுகளில் 69,033 வழக்குகளுக்கு தீர்வுகாணப்பட்டு, ரூ.660.26 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 69,212 வழக்குகளுக்கு தீர்வுகாணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் ரூ.682 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்ற மக்கள் நீதிமன்றங்களுக்கான ஏற்பாடுகளை மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு உறுப்பினர்-செயலரும், மாவட்ட நீதிபதியுமான ஏ.நசீர் அகமது, உயர் நீதிமன்ற சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலரும், மாவட்ட நீதிபதியுமான கே.சுதா ஆகியோர் செய்திருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE