தேவகோட்டை: தேவகோட்டை அருகே டெம்போ வேன் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மலேசியா சுற்றுலா பயணிகள் 10 பேர் உட்பட 11 பேர் காயமடைந்தனர்.
மலேசிய நாட்டில் இருந்து ஆன்மிக சுற்றுலா வந்த 12 பேர் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து திருச்சிக்கு இன்று (செப்.14) சென்றனர். வேனை மதுரையைச் சேர்ந்த ஓட்டுநர் கந்தையா (40) ஓட்டினார். அதேபோல், தஞ்சாவூரில் டீக்கடை நடத்தி வந்த பவுல் டேனியல் (38), அவரது மகள்கள் சூசன் ரெகுமா (10), ஹெலன் சாமா (7), சித்தப்பா மைக்கேல் (63) ஆகியோர் உறவினர் வீட்டு விசேஷத்துக்காக காரில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள ஆண்டாஊரணிக்கு வந்தனர்.
காரை பவுல் டேனியல் ஓட்டினார். தேவகோட்டை அருகே மார்க்கண்டேயன்பட்டி விலக்கு என்ற இடத்தில் மதியம் 12.30 மணிக்கு வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே வந்த டெம்போ வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் இருந்த 4 பேர், வேன் ஓட்டுநர் மற்றும் மலேசிய சுற்றுலா பயணிகள் 10 பேர் காயமடைந்தனர். கிராம மக்கள், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி காரில் பயணித்த பவுல் டேனியல், சூசன் ரெகுமா, ஹெலன் சாமா, மைக்கேல் ஆகிய நால்வரும் உயிரிழந்தனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தேவகோட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.