தமிழகத்தில் நாளை அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை - குரூப் 2 தேர்வால் அறிவிப்பு

By சி.பிரதாப்

சென்னை: தமிழகத்தில் அனைத்து விதமான பள்ளிகளுக்கும் நாளை (சனிக்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அனைத்துவிதமான பள்ளிகளும் கடந்த ஜூன் 10-ம் தேதி முதல் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையே பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட நடப்பு கல்வியாண்டுக்கான (2024-25) வருடாந்திர நாட்காட்டியில் செப். 14-ம் தேதி பள்ளி வேலைநாளாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதேநேரம் குரூப் 2 முதல்நிலைத் தேர்வு நாளை (செப். 14) காலை நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், குரூப் 2 தேர்வை கருத்தில் கொண்டு தமிழகத்தில் அனைத்துவிதமான பள்ளிகளுக்கும் நாளை (சனிக்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி கல்வியாண்டு நாட்காட்டியில் திருத்தம் செய்த அறிவிப்பை சுற்றறிக்கை வாயிலாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவித்துள்ளார். மேலும், விடுமுறை குறித்த தகவலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்து தொடர் நடவடிக்கைகள் எடுக்கவும் அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE