கடந்த 2 மாதங்களில் அண்ணா பல்கலைக்கு 10-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

By இ.ராமகிருஷ்ணன்

சென்னை: சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கடந்த 2 மாதத்தில் இன்று 10-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடுமுழுவதும் சமீப காலமாக ரயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களுக்கு மர்ம நபர்களால் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக போலீஸாருக்கு மின்னஞ்சல் மூலமாக இன்று (வெள்ளிக்கிழமை) மிரட்டல் வந்துள்ளது.

இதனையடுத்து பல்கலைக்கழகத்திற்கு விரைந்த போலீஸார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் வளாகம் முழுவதும் தீவிர சோதனையிட்டனர். சோதனையில் எந்தப் பொருளும் சிக்காததை அடுத்து வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 மாதங்களில் மட்டும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 10-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

“மிரட்டல் கும்பல் வெளி நாடுகளில் இருந்து இதுபோல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதுவும் ஒரே கும்பல்தான் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருகிறது. அவர்களை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளதால் இது போன்ற மிரட்டல் புரளிகளை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” என சென்னை காவல் ஆணையர் அருண் அறிவுறுத்தி உள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE