கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கை போலீஸார் சரியாக விசாரிக்கவில்லை: ஐகோர்ட் அதிருப்தி

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கை போலீஸார் சரியாக விசாரிக்கவில்லை, என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் போலியாக என்சிசி முகாம் நடத்தப்பட்டு, மாணவிளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்ட வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக்கோரி வழக்கறிஞர் ஏ.பி. சூர்யபிரகாசம் சென்னை உயர் நீதிம்னறத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது சட்டப்பணிகள் ஆணைக்குழு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையைப் படித்துப்பார்த்த நீதிபதிகள் அந்த பள்ளியில் போலியாக என்சிசி முகாம் நடத்தவும், இரவில் கேம்ப் ஃபயர் நடத்தவும் நிர்வாகம் எப்படி அனுமதி கொடுத்தது?. இந்த வழக்கில் கைதாகி பின்னர் எலி பேஸ்ட் சாப்பிட்டு இறந்ததாக கூறப்படும் சிவராமனிடம் 2 துப்பாக்கிகள் இருந்துள்ளது. அந்த துப்பாக்கிகள் அவருக்கு எப்படி வந்தது?. நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் கொன்று விடுவதாக சிவராமனும், பள்ளி நிர்வாகிகளும் சம்பந்தப்பட்ட மாணவிகளை மிரட்டியுள்ளனர்.

அதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதா? இறந்த சிவராமனை இந்த பள்ளி நிர்வாகத்துக்கு அறிமுகப்படுத்திய புவன் என்ற அந்த நபரை ஏன் இன்னும் போலீஸாரால் கைது செய்ய முடியவில்லை? அந்த புவனுக்கும், சிவராமனுக்கும் அப்படி என்ன தெ்ாடர்பு? இந்த பாலியல் சம்பவத்தில் வேறு யார், யாருக்கெல்லாம் சம்பந்தம் இருக்கிறது? இதுதொடர்பாக போலீஸார் புலன் விசாரணை நடத்தாமல் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என சரமாரியாக கேள்வி எழுப்பினர். மேலும் இந்த சம்பவத்தால் அந்த பள்ளிக்கு தங்களது குழந்தைகளை அனுப்பும் மனநிலையில் பெற்றோர் இல்லை என அறிக்கையில் கூறியிருப்பதை சுட்டிக்காட்டினர்.

அப்போது மனுதாரரான வழக்கறிஞர் ஏ.பி.சூர்யபிரகாசம் குறுக்கிட்டு, “கள்ளச் சாராயத்தை வேண்டுமென்றே குடித்து இறந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு தலா ரூ. 10 லட்சம் வழங்கியுள்ளது. ஆனால் கிருஷ்ணகிரியில் பல மாணவிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு போதுமான இழப்பீடு வழங்கவில்லை. இன்னும் இந்த வழக்கின் பின்னணி குறித்து போலீஸார் முழுமையாக ஆராயவில்லை. அதனால் தான் சிபிஐ விசாரணை கோரியுள்ளோம்,” என்றார்.

அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன்முகமது ஜின்னா ஆகியோர், “பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உரிய மனநல ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. 4 மாணவிகளின் பெற்றோர் தங்களுக்கு எந்த இழப்பீடும் வேண்டாம், எனக்கூறி விட்டனர். இந்த சம்பவம் மிகவும் தீவிரமானது.

இதுபோன்ற சம்பவம் இனி ஒருபோதும் நடக்கக்கூடாது. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் பக்கம் தான் நாங்களும் நிற்கிறோம். இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகம் மிகப்பெரிய தவறை செய்துள்ளது, இதுபோல போலியாக என்சிசி முகாம் நடத்திய மற்ற பள்ளி நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த முகாம் மூலமாக ஒவ்வொரு மாணவியிடமும் தலா ரூ.1,500 வசூலிக்கப்பட்டுள்ளது,” என்றனர்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் போலீஸாரின் விசாரணை சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை என அதிருப்தி தெரிவித்தனர். மேலும், இறந்த சிவராமன் மற்றும் புவனின் பின்னணி, துப்பாக்கிகள் வந்தது எப்படி என்பது குறித்து போலீஸார் முறையாக புலன் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை வரும் செப்.19-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE