மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிலத்தை குறைந்த வாடகைக்கு விட ஒப்புதல் அளிக்கும் அரசாணையை எதிர்த்து வழக்கு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: ரூ.40 கோடி மதிப்புள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை குறைந்த வாடகைக்கு விட ஒப்புதல் அளிக்கும் அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அறநிலையத் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பசுமை வழிச்சாலையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான ரூ.40 கோடி மதிப்புள்ள 10 கிரவுண்ட் நிலத்தை இந்திய மாதர் சங்கம் என்ற அமைப்புக்கு கடந்த 2010-ம் ஆண்டு முதல் 29 ஆண்டுகளுக்கு ரூ.3 ஆயிரம் வாடகை என்ற அடிப்படையில் குத்தகைக்கு விட ஒப்புதல் அளித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி மயிலாப்பூரைச் சேர்ந்த டி.ஆர். ரமேஷ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், ‘கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 10 கிரவுண்ட் நிலத்துக்கு நியாயமான வாடகை நிர்ணயம் செய்யப்படாததால் கோயிலுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, தனியார் ஆடிட்டர் ஒருவரை நியமித்து இழப்பீட்டுத் தொகையை கணக்கிட்டு கோயிலுக்கு வர வேண்டிய இழப்பீட்டுத் தொகையை வசூலிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் கோயில் நிலத்தை குறைந்த வாடகைக்கு விட ஒப்புதல் அளித்து சட்டவிரோதமாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து கோயில் நிலத்தை மீட்க வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (செப்.12) விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர்.ஆர்.அருண் நடராஜன், “இந்த நிலத்தை ஏற்கெனவே குத்தகைக்கு வழங்குவது தொடர்பாக ஆட்சேபங்கள் கோரியபோது கடந்த 2012-ம் ஆண்டு மனுதாரர் ஆட்சேபம் தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது 12 ஆண்டுகள் கழித்து இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். தற்போது அந்த நிலத்துக்கு ரூ. 4 லட்சம் வாடகை நிர்ணயம் செய்வது தொடர்பாக அறநிலையத்துறை ஆணையர் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்” என்றார்.

அப்போது மனுதாரரான டி.ஆர்.ரமேஷ் ஆஜராகி, “கடந்த 2011-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணையை வாபஸ் பெறக்கோரி கடந்த 2013-ம் ஆண்டு அறநிலையத்துறை ஆணையர் பிறப்பித்த பரிந்துரை மீது இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” எனக் குற்றம் சாட்டினார்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் அறநிலையத்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE