பெண்கள் நலனுக்காக மத்திய அரசு பல நலத்திட்டங்களை செயல்படுத்துகிறது: நிர்மலா சீதாராமன்

By ஆர்.ஆதித்தன்

கோவை: “பெண்கள் வாழ்வாதார மேம்பாட்டுக்கு மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாக” மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கோவையில் மக்கள் சேவை மையத்தின் சுயம் திட்டத்தின் கீழ் 1,500 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (செப்.12) நடைபெற்றது. இதில் பெண்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: தொழில் செய்வதற்கு செயல், திறமை ஆகியவற்றுடன் தன்னம்பிக்கையும் வேண்டும். பிரதமர் மக்கள் நிதி திட்டம் மூலம் மொத்தம் 53 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அதில் பெண்களுக்கு 29.6 கோடி வங்கிக் கணக்குகள் உள்ளன. தமிழகத்தில் 94 லட்சம் வங்கி கணக்குகளும், கோவையில் 5 லட்சம் கணக்குகளும் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த வங்கிக் கணக்குகள் மூலம் பெண்கள் தொழில் தொடங்கி மேம்பட முடியும். பிரதமர் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் கோவையில் 2.63 லட்சம் வங்கிக் கணக்குகள் உள்ளன. பிரதமர் விபத்து காப்பீட்டுத் திட்டத்தில் 7 லட்சம் வங்கி கணக்குகள் உள்ளன. அடல் ஓய்வூதியத் திட்டத்தில் 1 லட்சம் பெண்கள் உள்ளனர். முத்ரா திட்டத்தில் 15 லட்சம் பெண்கள் பயனாளிகளாக உள்ளனர். இது சுமார் 71 சதவீதமாகும். ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் மூலம் 2,549 பெண்கள் பலன் அடைந்துள்ளனர். அதேபோல தெருவோர வியாபாரிகளுக்கான ஸ்வநிதி திட்டத்தின் கீழ் 12 ஆயிரம் பெண்கள் பயன்பெற்றுள்ளனர்.

பெண்களுக்கான தொழிற் பயிற்சி வழங்குவதற்கு நாடு முழுவதும் 311 பயிற்சி மையங்கள் உள்ளன. கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிறுவனத்தில் மகளிருக்கென தொழில் பயிற்சி வழங்கி மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். பெண்களின் வாழ்வாரத்தை மேம்படுத்த பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசுகையில், “மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்த மாநில அரசிதழில் வெளியிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE