நீலகிரி: சேரங்கோடு ஊராட்சியில் கணக்கில் வராத ரூ.3.25 லட்சத்தைப் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் இதுகுறித்து ஊராட்சி தலைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சி உள்ளது. இங்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த லில்லி ஏலியாஸ் தலைவராக உள்ளார். இந்த ஊராட்சியில் திட்டப் பணிகளுக்கு கமிஷன் பெற்று, தகுதியில்லாத நபர்களுக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆய்வாளர் ஜெயக்குமார் தலைமையில் நேற்று (செப்.11) மாலையில் சேரங்கோடு ஊராட்சி அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஊராட்சி அலுவலகத்தில் கணக்கில் வராத, ரூ.3.25 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்தப் பணத்தை பறிமுதல் செய்த போலீஸார், ஊராட்சி செயலர் சஜீத், தலைவர் லில்லி ஏலியாஸ் மற்றும் அலுவலக பணியாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.