பரங்கிப்பேட்டை அருகே கார் மீது லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

By க.ரமேஷ்

கடலூர்: பரங்கிப்பேட்டை அருகே பு.முட்லூர் அருகே கார் மீது லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள், குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர். இது குறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த நக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது அன்வர் (56). இவரது உறவினர் ஒருவர் உடல்நலக் குறைவால் துபாயில் இருந்து அழைத்துவரப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவரை பார்ப்பதற்காக முகமது அன்வர் தனது உறவினர்களுடன் ஒரு காரில் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்.

இவர்கள் அனைவரும் சென்னையில் சிகிச்சை பெற்று வருபவரை பார்த்து நலம் விசாரித்து விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தனர். இவர்கள் வந்த காரை தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கொரநாட்டு கருப்பூரைச் சேர்ந்த யாசர் அராபத் (38) என்பவர் ஒட்டி வந்தார். காரில் நக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஹாஜிரா பேகம் (65), திருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஹராபத் நிஷா (27) அவரது குழந்தை அப்னான் (3) ஆகியோர் பயணம் செய்தனர்.

இன்று (செப்.12) அதிகாலை 3 மணியளவில், சிதம்பரம் அருகே உள்ள பு.முட்லூர் மேம்பாலத்தின் அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியது. இதில் காரில் பயணம் செய்த 5 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரங்கிப்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் காரில் இடிபாடுகளில் சிக்கியவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். விபத்து நடந்த நெடுஞ்சாலை மேம்பாலம் ஒருவழிப் பாதையாக இருக்கிறது. ஆனால், போதிய எச்சரிக்கை பலகை மற்றும் தடுப்புக் கட்டைகள் வைக்கவில்லை. இப்போது விபத்து நடந்த பிறகு அந்த இடத்தில் நெடுஞ்சாலைத் துறையினர் அவசர அவசரமாக தடுப்புக் கட்டைகளை அமைத்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE