தமிழகத்தில் இடி, மின்னலுடன் இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அம்மையத்தின் இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம். மேற்கூறிய இடங்களில் செப்.17-ம் தேதி வரை லேசானது முதல்மிதமான மழை பெய்யக் கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: சென்னை மற்றும் புறநகரைப் பொருத்தவரை இன்றுவானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசிலபகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 96.8 - 98.6 டிகிரியை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 80.6 - 82.4 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியகுமரிக்கடல் பகுதிகள், தெற்கு, மத்திய மற்றும் வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள், மேற்குவங்க கடலோரப்பகுதிகள், தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள், மத்தியமேற்கு அரபிக்கடலின் தென்மேற்கு பகுதிகள், தென்மேற்கு அரபிக்கடலின் வடக்கு பகுதிகள்,மத்திய அரபிக்கடலின் மத்திய பகுதிகளில் செப்.14 வரை பலத்த சூறாவளிக் காற்று அதிகபட்சமாக மணிக்கு 55 முதல் 65 கிமீ வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா அலுவலகத்தில் 6 செமீ மழை பதிவானது. மதுரை விமான நிலையத்தில் 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE