மாணவர்களின் வளர்ச்சியை பாதிக்கும் இணைய விளையாட்டுகள்; கண்காணிப்பது அவசியம்: தலைமை செயலர் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: உடல், மனரீதியாக மாணவர்களின் வளர்ச்சியை இணையவழி விளையாட்டுகள் வெகுவாக பாதிக்கின்றன. அவர்களை பெற்றோர்,ஆசிரியர்கள் கண்காணித்து நல்வழிப்படுத்த வேண்டும் என்றுதலைமைச் செயலர் நா.முருகானந்தம் அறிவுறுத்தியுள்ளார்.

இணையவழி விளையாட்டுகளுக்கு அடிமையாக கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் சார்பில் சென்னையில் நேற்று விழிப்புணர்வுமுகாம் நடைபெற்றது. முகாமைதலைமைச் செயலர் நா.முருகானந்தம் தொடங்கி வைத்து பேசியதாவது: தொழில்நுட்ப வளர்ச்சியை தடுக்க முடியாது. ஆனால், விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியம்

இணையவழி சூதாட்டம், விளையாட்டுகளின் தீமை கருதி, அதை தடுக்கும் வகையில், நாட்டில் முதல்முறையாக தமிழக அரசு சட்டம் உருவாக்கியது. இதுபோன்ற சட்டம் வேறு மாநிலங்களில் இல்லை. இணையவழி விளையாட்டுகள் மீதான மோகம், அடிமைத்தனம் மிக அதிகஅளவில், குறிப்பாக மாணவர்களிடம் வேகமாக பரவி வருகிறது. மனநிலை சார்ந்த குறைபாடாகவும் இதுமாறி வருகிறது. இளைய சமுதாயத்தினரிடம் இது ஒருமுக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது. இதை தவிர்ப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக சிகிச்சையும் அளிக்க வேண்டும். கரோனா காலத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதால், இணையவழி கல்விக்கு மாறியபோதுதான், இந்த பழக்கம் அதிகமானது. இணையவழி விளையாட்டுகள் இயற்கைக்கு மாறாக மாணவர்களை மாற்றுகின்றன. நிழல் உலகில் அவர்கள் வாழ்வது போன்ற சூழலை உருவாக்குகிறது. உடல், மனரீதியாக மாணவர்களின் வளர்ச்சியை இணையவழி விளையாட்டுகள் வெகுவாக பாதிக்கின்றன. சீனா, ஜப்பானில் இளைஞர்கள், இளஞ்சிறார்களுக்கு ஆன்லைன் விளையாட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கு விளையாட்டுமிகவும் அவசியம். அவர்கள் வெளியில் சென்று விளையாடுவதை ஊக்குவித்து, சமூக ஊடக பயன்பாட்டில் இருந்து அவர்களை விலகிஇருக்க செய்ய வேண்டும். இதில் பெற்றோர், ஆசிரியர்களின் கடமை முக்கியமானது. மாணவர்களின் நடத்தைகளை கண்காணித்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.மாணவர்களிடம் முடிந்தவரை கைபேசியை கொடுக்காமல் இருப்பது நல்லது. புதிய தொழில்நுட்பங்களை மாணவர்கள், இளைஞர்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி, தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு பேசினார். இதேபோல் உள்துறை செயலர் தீரஜ்குமார், தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணைய தலைவர் முகமது நசிமுதீன் உள்ளிட்டோரும் பேசினர். இதில் ஆணைய உறுப்பினரான முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சாரங்கன் மற்றும் பள்ளிமாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE