சென்னை பள்ளியில் மாணவிகளுக்கான கராத்தே, டேக்வாண்டோ விளையாட்டு பயிற்சி: மேயர் பிரியா தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை பள்ளி மாணவிகளுக்கான கராத்தே மற்றும் டேக்வாண்டோ விளையாட்டு பயிற்சியை சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார். இதுகுறித்து சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2024-25-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், சென்னை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பும் குத்துச்சண்டை, ஜூடோ, கராத்தே, சதுரங்க விளையாட்டு, கேரம், டேக்வோண்டோ, தடகள விளையாட்டு போட்டிகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.

அவர்களை மண்டல, மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்குபெறச் செய்வதற்கு, தகுதிவாய்ந்த பயிற்சியாளர்கள் தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்படுவர். வரும் கல்வியாண்டில் 6 மாதங்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தவும் விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கும் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக மாணவர்களை அழைத்துச் சென்று வரும் செலவினங்களுக்காகவும் ரூ.30 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில், 2024-25-ம் கல்வியாண்டில் சென்னை பள்ளி மாணவிகளுக்கான கராத்தே, டேக்வோண்டோ பயிற்சி, திரு.வி.க.நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குக்ஸ் சாலை சென்னை உயர்நிலைப்பள்ளி, ராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணிகண்டன் தெரு சென்னை உயர்நிலைப்பள்ளி, ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புத்தா தெரு சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சைதாப்பேட்டை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவான்மியூர் சென்னை மேல்நிலைப்பள்ளி, திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காலடிப்பேட்டை சென்னை உயர்நிலைப்பள்ளி என 6 சென்னை பள்ளிகளில் முதற்கட்டமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அதன்படி, திரு.வி.க.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குக்ஸ் சாலை சென்னை உயர்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கான கராத்தே மற்றும் டேக்வாண்டோ விளையாட்டு பயிற்சியை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நேற்று தொடங்கிவைத்து பார்வையிட்டார்.

ஒவ்வொரு பள்ளியிலும் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் 50 மாணவிகளை தேர்ந்தெடுத்து, வாரத்தில் 2 நாட்களில் 75 நிமிடங்கள், தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் மூலமாக அதற்குத் தேவையான உபகரணங்களுடன் சரியான முறையில் பயிற்சிகள் கொடுக்கப்படும். 6 மாதங்கள் தொடர்ந்து நடைபெற உள்ள இந்த பயிற்சியின் முடிவில் பயிற்சி எடுத்துக் கொண்ட மாணவிகள் இடையே போட்டிகள் நடத்தவும், மண்டல, மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெறும் கராத்தே போட்டிகளில் இவர்களை பங்கேற்கச் செய்து வெற்றி பெறச் செய்வதும் நோக்கமாகும்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE