சென்னை: குரூப்-4 தேர்வில் கூடுதலாக 480 காலியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 6724 ஆக அதிகரித்துள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், பில் கலெக்டர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், பாரஸ்டர் உள்பட பல்வேறு பதவிகளில் காலியாகவுள்ள 6224 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு கடந்த ஜூன் 9-ம் தேதி நடத்தப்பட்டது. டிஎன்பிஎஸ்சி நடத்திய இத்தேர்வை 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தேர்வு முடிவு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குரூப்-4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி கடந்த வாரம் அறிவித்தது.
தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாவதால் தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், அரசின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு-3) மற்றும் பாரஸ்டர், பாரஸ்ட் வாட்சர், பில் கலெக்டர், உள்ளிட்ட பதவிகளில் கூடுதலாக 480 காலியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி இன்று ஓர் அறிவிப்பு வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, குருப்-4 தேர்வில் காலியிடங்களின் எண்ணிக்கை 6244-லிருந்து 6724 ஆக அதிகரித்துள்ளது. காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் கட் ஆப் மதிப்பெண் சற்று குறைய வாய்ப்புள்ளது.