“திருவள்ளூரில் 150 ஏக்கரில் திரைப்பட நகரத்துக்கான பணிகள் விரைவில் தொடங்கும்” -  அமைச்சர் தகவல்

By கி.கணேஷ்

சென்னை: “திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 150 ஏக்கரில் ஒரு திரைப்பட நகரம் உருவாக்கப்பட உள்ளது. அதற்கான நிலம் மாற்றுப் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் தொடங்கும்” என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை தரமணி, அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் புதிய படப்பிடிப்பு தளங்கள் அமைக்கப்படும் இடங்களை, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று ஆய்வு செய்தார். அப்போது, செய்தித் துறை செயலர் வே.ராஜாராமன், செய்தித் துறை இயக்குநர் இரா.வைத்திநாதன், அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவர் நடிகர் ராஜேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

ஆய்வுக்குப் பின், அமைச்சர் சாமிநாதன் செய்தியாளர்களிடம் கூறியது: “எம்ஜிஆர் திரைப்பட நகரத்தில் உள்ள படப்பிடிப்பு தளம் பழுதடைந்திருந்த நிலையில், கடந்தாண்டு மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டு ரூ.5 கோடியில் குளிர்சாதன வசதியுடன் படப்பிடிப்பு தளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையிலேயே படம் எடுக்கக் கூடிய வகையில் படப்பிடிப்பு தளத்தைப் பயன்படுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், தற்போது படப்பிடிப்பு நடத்துவதற்காக 3 புதிய தளங்களைக் கொண்ட அரங்கங்கள் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இந்த இடங்கள் இறுதி செய்யப்பட்டு 3 புதிய படப்பிடிப்பு தளங்கள் ரூ.39.33 கோடியில் கட்டப்பட உள்ளன.

இது, படங்கள் தயாரிப்பவர்களுக்கும், திரையுலகத்தைச் சார்ந்தவர்களுக்கும், சின்னத் திரையை சார்ந்தவர்களுக்கும் உதவியாக அமையும். காரணம், சென்னையிலேயே படப்பிடிப்பு நடத்துவதால் பல்வேறு சிரமங்கள் தவிர்க்கப்படுகிறது, செலவுகள் குறைக்கப்படுகிறது. திரைப்படத் துறையினர் விரும்பக்கூடிய ஒரு திட்டமாக நிச்சயமாக இது அமையும்.

மேலும், முதல்வர் ஸ்டாலின் உத்தரவுக் கிணங்க திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 150 ஏக்கரில் ஒரு திரைப்பட நகரம் உருவாக்கப்பட உள்ளது. அமைச்சர் உதயநிதியும் அதற்கான இடத்தை பார்வையிட்டுள்ளார். திரைப்பட நகர் அமைப்பதற்கு உகந்த இடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கான நிலம் மாற்றுப் பணிகள் நடைபெற்று வருகிறது, விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE