வடசென்னை - 3 அனல்மின் நிலையத்தில் வணிக ரீதியான உற்பத்தி விரைவில் தொடக்கம்

By ப.முரளிதரன்

சென்னை: வடசென்னை - 3 அனல்மின் நிலையத்தில், வணிக ரீதியான உற்பத்தி விரைவில் தொடங்குவதற்கான இறுதிக் கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

மின்வாரியம் திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் 800 மெகா வாட் திறனில் வடசென்னை-3 அனல் மின் நிலையம் அமைந்துள்ளது. ரூ.10,158 கோடி மதிப்பிலான இத்திட்டப் பணி கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கியது. இந்த மின் நிலையத்தில் பாய்லர், டர்பைன், ஜெனரேட்டர் நிறுவுதல் ஆகிய முக்கியப் பணிகளை பிஹெச்இஎல் நிறுவனமும், நிலக்கரி, சாம்பல் கட்டமைப்புப் பணிகளை தனியார் நிறுவனமும் மேற்கொண்டன. இங்கு கடந்த 2020 - 21ம் ஆண்டே மின் உற்பத்தி தொடங்க திட்டமிடப்பட்டது.

ஆனால், பல்வேறு காரணங்களால் இப்பணி தாமதமாகி கடந்த மார்ச் 7ம் தேதி தான் சோதனை மின்னுற்பத்தி தொடங்கியது. தினமும் சராசரியாக 250 மெகா வாட் மின்னுற்பத்தி செய்யப்பட்ட நிலையில், ஜுன் 27ம் தேதி முழு திறனான 800 மெகா வாட் மின்னுற்பத்தி செய்யப்பட்டது. பின்னர் அது குறைக்கப்பட்டு தினசரி 500 முதல் 600 மெகா வாட் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது.

ஒரு மின் நிலையத்தில் சோதனை உற்பத்தி தொடங்கிய பிறகு தொடர்ந்து 72 மணி நேரம் முழு உற்பத்தி செய்ய வேண்டும். அதைத்தொடர்ந்து தான் மின் நிலையம் வணிக ரீதியாக செயல்பட தொடங்கியதாக அறிவிக்கப்படும். ஆனால் வடசென்னை-3 மின் நிலையத்தில், சோதனை உற்பத்தி தொடங்கி 5 மாதங்கள் ஆகியும் வணிக உற்பத்தி தொடங்கப்படவில்லை.

இது குறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், “மின்வாரியத்துக்கு சொந்தமான ஆறு மின் நிலையங்களில் வடசென்னை-3 தான் அதிக திறன் கொண்டது. மிகப்பெரிய கட்டமைப்பை கொண்ட இந்த மின் நிலையத்தில் ஒவ்வொரு சாதனங்களையும் பரிசோதிக்க வேண்டி உள்ளது. இதனால், மின்னுற்பத்தி தொடங்கிய நிலையில் சில பிரச்சினைகள் கண்டறியப்பட்டு சரி செய்யப்பட்டு வரப்படுகிறது. தற்போது அனைத்து சோதனைகளும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால் விரைவில் வணிக உற்பத்தி தொடங்கப்படும்” என்று அதிகாரிகள் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE