திருவள்ளூர்: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் மதுபோதையில் சிகிச்சை அளித்ததாக புகார்

By இரா.நாகராஜன்

திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொதுமருத்துவர் மதுபோதையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததாக புகார் எழுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் ஜெ.என்.சாலையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. சுமார் 500 படுக்கைகளுடன் கூடிய இந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள், அதிநவீன மருத்துவ உபகரணங்களுடன் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில், இந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று (செப்.10) இரவு பணியில் இருந்த பொது மருத்துவர் நல்லதம்பி என்பவர், மதுபோதையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கேள்வி எழுப்பிய நோயாளிகளின் உதவியாளர்களை பொதுமருத்துவர் நல்லதம்பி தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர் நல்லதம்பியை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வெளியே அழைத்துச் சென்றதுடன், நோயாளிகள் மற்றும் உதவியாளர்களை சமாதானப்படுத்தினர்.

தொடர்ந்து, மருத்துவமனை பாதுகாவலர்கள், மருத்துவர் நல்லதம்பியை தாங்கள் தங்கும் அறையில் உறங்க வைத்ததாக தெரிகிறது. இந்த நிலையில், மருத்துவர் நல்லதம்பி நேற்று இரவு நடந்துகொண்ட விதம் குறித்தான காணொலி காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதைத் தொடர்ந்து இந்தப் புகார் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE