விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாதது ஏன்? - விஜய்க்கு பாஜக மாநில செயலாளர் கேள்வி

By செய்திப்பிரிவு

பழநி: விநாயகர் சதுர்த்திக்கு நடிகர் விஜய் வாழ்த்து சொல்லாதது ஏன் என்று பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் பழநியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

பழநி அடிவாரப் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களைக் பற்றி திமுக அரசுக்கு கவலை இல்லை. இந்த விவகாரத்தில் அரசு அலட்சியமாக செயல்படுகிறது. பெருந்திட்ட வளர்ச்சி என்ற பெயரில் யாரிடமும் ஆலோசிக்காமல், மக்கள் பாதிப்படையும் வகையில் செயல்படும் ஆட்சியாளர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி தனது திரைப்படத்தை வெளியிட்டு கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நடிகரும், தவெக கட்சித் தலைவருமான விஜய்க்கு, விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடும் மக்களுக்கு வாழ்த்துக் கூற மனமில்லையா? தனிப்பட்ட நபராக வாழ்த்துக் கூறுவதும், கூறாததும் அவரவர் விருப்பம். ஆனால், ஒரு கட்சியின் தலைவராக இருந்து கொண்டு, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காதது ஏன் என்று மக்கள் கேள்வி கேட்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE