மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு 23,000 கனஅடியாக அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

மேட்டூர்/தருமபுரி: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையைப் பொறுத்து, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இருக்கும். தற்போது காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை தணிந்துள்ளதால், அணைக்கு வரும் நீரின் அளவு குறையத் தொடங்கியுள்ளது.

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 11,736 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 10,706 கனஅடியாகக் குறைந்தது. காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் தேவை அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 19 ஆயிரம் கனஅடியில் இருந்து 23 ஆயிரம் கனஅடியாக நேற்று காலை அதிகரிக்கப்பட்டது. கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 700 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

நீர்வரத்தைக் காட்டிலும் தண்ணீர் திறப்பு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரியத்தொடங்கிஉள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று 114.91 அடியாகவும், நீர் இருப்பு 85.58 டிஎம்சியாகவும் இருந்தது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் காலை முதல் விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE