ஊதிய ஒப்பந்த கோரிக்கையை விளக்கி போக்குவரத்து தொழிலாளர் வாயிற்கூட்டம் தொடக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை குரோம்பேட்டையில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய ஒப்பந்தத்துக்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை கடந்த 27-ம் தேதி நடைபெற்றது. அது அறிமுக கூட்டமாக நடைபெற்ற நிலையில், அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் பரிசீலிக்க வேண்டிய கோரிக்கைகளை அனைத்து சங்கங்களும் கடிதம் வாயிலாக தெரிவித்திருந்தன.

இந்த கோரிக்கைகளை தொழிலாளர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் மாநிலம்தழுவிய அளவில் வாயிற்கூட்டங்கள் நடத்தப்படும் என சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்டவைஅடங்கிய போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும்அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.

அதனடிப்படையில் நேற்று முதல்வாயிற்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. உணவு இடைவேளை உள்ளிட்ட நேரங்களில் தொழிலாளர்கள் பணிமனைகளில் கூடி, ஊதிய ஒப்பந்தத்தில் முன்வைத்திருக்கும் கோரிக்கைகளை விளக்குகின்றனர். அந்த வகையில் நேற்று சென்னையில் வடபழனி, திருவான்மியூர், ஆவடி உள்ளிட்ட6 பணிமனைகளில் வாயிற்கூட்டங்கள் நடத்தப்பட்டன.

இது தொடர்பாக அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கபொதுச்செயலாளர் வி.தயானந்தம் கூறும்போது, ``அடுத்துநடைபெறும் பேச்சுவார்த்தையில், பணி ஓய்வுபெறும் தொழிலாளர்களுக்கு ஓய்வுக்கால பலன்களை உடனடியாக வழங்குவது, நிலுவை ஓய்வுக்கால பலன்களை வழங்குவது, மருத்துவ காப்பீடு, அனைவருக்கும் ஓய்வூதியம் உள்ளிட்டவற்றை கோரிக்கைகளாக முன்வைத்துள்ளோம். இந்த கோரிக்கைகளுக்கு தீர்வு காண அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தி வாயிற்கூட்டங்களை நடத்துகிறோம்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE