பண்டிகை காலத்தில் ஆவின் பொருட்கள் விற்பனையை 20 சதவீதம் அதிகரிக்க திட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: நிகழாண்டில் ஆயுதபூஜை, தீபாவளிப் பண்டிகை காலத்தில் நெய் மற்றும் இனிப்பு வகைகள் உள்ளிட்ட ஆவின் பொருட்கள் விற்பனையை 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை அதிகரிக்க ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனை செய்யும் பணியில் ஆவின் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. பால் உப பொருள்களான வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா உட்பட 200-க்கும் மேற்பட்ட பொருள்களை தமிழகம் முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள் வாயிலாக, தயாரித்து, ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.

இதற்கிடையில், நிகழாண்டில் ஆயுதபூஜை மற்றும் தீபாவளிப் பண்டிகை காலத்தில் சிறப்பு இனிப்புவகைகள் உட்பட பால் பொருட்கள் விற்பனையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆவின் நிறுவன மேலாண்மை இயக்குநர் சு.வினீத் கூறியதாவது: ஆவின் நிறுவனம் சார்பில், வெண்ணெய், நெய், பால்கோவா, லஸ்ஸி, மோர், தயிர் மற்றும் ஜஸ்கிரீம் போன்ற பால் பொருள்களைதயாரித்து, ஆவின் பாலகங்கள்மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலமாக விற்பனை செய்யப்படுகின்றன. இதுதவிர, பண்டிகை காலத்தில் இனிப்பு வகைகள், காரவகைகள் தயாரித்து விற்பனைசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆயுதபூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ் உட்பட பல்வேறு பண்டிகைகள் அடுத்தடுத்து வர உள்ளன. இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் ஆவின் பொருட்கள் விற்பனையை 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 480 டன் ஆவின் நெய் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு 580 டன் ஆவின் நெய்விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை காலத்தில் ஒவ்வொரு மாவட்டத்தில் சிறப்புவாய்ந்த இனிப்பு வகைகளை ஆவின் மூலமாக சென்னை உட்படபல்வேறு நகரங்களுக்கு கொண்டுசென்று விற்கவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு ஆவின் நிறுவன மேலாண்மை இயக்குநர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE