“மகாவிஷ்ணு மீது வழக்கு போடுவது தமிழக அரசுக்கு கரும்புள்ளி” - மன்னார்குடி ஜீயர் கருத்து

By எஸ்.கோபாலகிருஷ்ணன்

திருவாரூர்: சென்னை அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு தன்னம்பிக்கை உரை நிகழ்த்த சென்ற மகாவிஷ்ணு மீது வழக்கு போடுவது, தமிழக அரசுக்கு கரும்புள்ளியாக அமையும் என மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் கருத்து தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் மன்னார்குடி சென்டலங்கார ஜீயர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “ஆண்டுதோறும், மன்னார்குடியில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளிலும் படித்து வரும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், எழுது பொருட்கள் வழங்கி வருகிறேன். இந்த ஆண்டு எழுதுபொருள், நோட்டுப் புத்தகங்களை கொடுப்பதற்காக நான் மன்னார்குடியில் உள்ள அரசு பள்ளி ஒன்றுக்கு சென்ற போது மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதியின்றி அரசு பள்ளிகளில் நோட்டு புத்தகங்கள் கொடுக்க அனுமதி இல்லை என ஆசிரியர்கள் தெரிவித்தனர். இத்தனை ஆண்டுகளாக மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கியதை நிகழாண்டில் மட்டும் தடுப்பதில், உள்நோக்கம் உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மகாவிஷ்ணு என்பவர் சென்னை அரசுப்பள்ளி ஒன்றில், ஆன்மீக உரையாற்றியதை சுட்டிக்காட்டி, அதனால் தனக்கு அரசு பள்ளியில் இலவச எழுது பொருட்களை வழங்க அனுமதி வழங்கவில்லையோ என்ற சந்தேகம் வருகிறது. கல்வி போதிப்பதில் சாதி, மத இனம் போன்ற பாகுபாடுகள் பார்க்க கூடாது. திருவள்ளுவர், ஔவையார், ஷேக்ஸ்பியர் போன்றோர் கூறிய கருத்துக்களைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, அவர்களின் இனம், மதம் போன்றவற்றை ஆராயக்கூடாது.

கிறிஸ்தவர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வேளாங்கண்ணிக்கு தேர் இழுத்துக் கொண்டும், சிலைகளை சுமந்து கொண்டும் பாதயாத்திரை செல்கின்றனர். இவர்கள் யாரிடம் அனுமதி பெற்று இத்தகைய தேர் பவனிகளை நடத்துகின்றனர்? அவர்களுக்கு அரசு தடை விதிக்கவில்லை. ஆனால் விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலத்துக்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது.

இந்து மதத்துக்கு விரோதமாக செயல்படுவது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது. தற்போது நடைபெறும் ஆட்சியில் தைரியமாக நல்லதை செய்பவர்கள், நல்லதை பேசுபவர்கள் மீதுதான் வழக்கு போடுவது வழக்கமான ஒன்றாகவே உள்ளது. மகாவிஷ்ணு மீது வழக்கு போடுவது மிகவும் தவறான ஒன்று. அவர் சாதி, மதம், சமயம் பற்றியோ, பிற மதங்கள் பற்றியோ பள்ளி மாணவர்கள் குறித்து தவறான கருத்துகளையோ தெரிவிக்கவில்லை. அத்தகைய கருத்துகளை தெரிவித்து இருந்தால் மகாவிஷ்ணு மீது நானே வழக்கு தொடர வேண்டும் என்பதை வலியுறுத்துவேன். எனவே, மகாவிஷ்ணு மீது தமிழக அரசு வழக்கு தொடுப்பது, தமிழக அரசுக்கு கரும்புள்ளியாக அமையும். மகாவிஷ்ணு மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE