வந்தே பாரத் ரயிலில் பயணி புகைப்பிடித்ததால் ஒலித்த எச்சரிக்கை அலாரம் - ரயிலை நிறுத்தி சோதனை

By எம். வேல்சங்கர்

சென்னை: எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு புறப்பட்ட வந்தே பாரத் ரயிலில் பயணி ஒருவர் புகைப்பிடித்ததால், எச்சரிக்கை அலாரம் ஒலித்தது. உடனடியாக, ரயிலை நிறுத்தி சோதனை செய்த ரயில்வே போலீஸார் மற்றும் அதிகாரிகள் புகைப்பிடித்த பயணியை பிடித்து விசாரணை நடத்தினர்.

சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு நேற்று (செப்.9) பிற்பகல் 2.50 மணிக்கு வந்தே பாரத் ரயில் புறப்பட்டது. இந்த ரயிலில் 400-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். இந்த ரயில் நேற்று மாலை 4.15 மணிக்கு ஒலக்கூர் - திண்டிவனம் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது, சி2 பெட்டியில் இருந்து திடீரென தீ எச்சரிக்கை அலாரம் ஒலித்தது. இதையடுத்து, அந்த ரயில் நிறுத்தப்பட்டது. உடனடியாக, ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள், டிக்கெட் பரிசோதகர், ரயில் மேலாளர் ஆகியோர் எச்சரிக்கை அலாரம் ஒலித்த இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தனர்.

அப்போது, அங்குள்ள கழிவறையில் பயணி ஒருவர் புகைபிடித்ததால், புகை மூட்டம் ஏற்பட்டு, தீ எச்சரிக்கை அலாரம் அடித்ததும், புகைப்பிடித்த பயணி தப்பிவிட்டதும் தெரியவந்தது.தொடர்ந்து, அந்த ரயில் 5 நிமிடம் தாமதமாக மீண்டும் மாலை 4.21 மணிக்கு புறப்பட்டு சென்றது. ரயில்வே போலீஸார் வழக்குப்பதிந்து, சிசிடிவி காட்சிப் பதிவுகளை வைத்து அந்த பயணி குறித்து விசாரித்தனர்.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “வந்தே பாரத் ரயிலில் தீ மற்றும் புகை வந்தால், உடனடியாக எச்சரிக்கை கொடுக்கும் நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே, வந்தே பாரத் ரயிலில் பயணி யாராவது புகைப்பிடித்தால் உடனடியாக கண்டிபிடித்து விடமுடியும். எனவே, வந்தே பாரத் ரயில் உள்பட எந்த ரயிலிலும் பயணிகள் புகைப்பிடிக்கக் கூடாது. அவ்வாறு புகைப்பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த பயணி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வந்தே பாரத் ரயிலில் புகைப்பிடித்த பயணியை கண்டுபிடித்து உள்ளோம்,” என்று அவர்கள் கூறினா்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE