‘கிண்டி ரேஸ் கிளப்பில் இன்னும் ‘சீல்’ அகற்றப்படவில்லை’ - அரசின் உத்தரவாதத்தை முன்வைத்து முறையீடு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: உயர் நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தின்படி கிண்டி ரேஸ் கிளப்புக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றவில்லை எனக் கூறி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கிண்டி ரேஸ் கிளப்புக்கு குத்தகை வாடகை பாக்கியாக ரூ.730 கோடி செலுத்தவில்லை என்பதால் அதற்கான குத்தகையை ரத்து செய்த தமிழக அரசு, உடனடியாக சுவாதீனம் எடுக்கும் வகையில் ரேஸ் கிளப்புக்கு சீல் வைத்தது. இதை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், குத்தகையை ரத்து செய்த தமிழக அரசு காலி செய்ய அவகாசம் வழங்காமல் சுவாதீனம் எடுத்து சீல் வைத்ததற்கு கண்டனம் தெரிவித்தனர்.

அதையடுத்து, குத்தகை ரத்து மற்றும் சுவாதீனம் தொடர்பாக தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பி உரிய அவகாசம் வழங்கி அதன் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதையடுத்து, தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய அனுமதியளித்த நீதிபதிகள், அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என தமிழக அரசுக்கும் உத்தரவி்ட்டிருந்தனர்.

இந்நிலையில், நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்துக்கு மாறாக ரேஸ் கிளப் நுழைவாயிலில் வைக்கப்பட்ட சீலை இன்னும் அதிகாரிகள் அகற்றவில்லை எனக் கூறி கிளப் நிர்வாகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று முறையிட்டார். அதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் மற்றும் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆகியோர் “ரூ.730 கோடியை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர்” என எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி ரேஸ் கிளப்புக்கு செல்லும் மூன்று நுழைவாயில்களுக்கு வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்பட்டுவிட்டதாக தெரிவித்தார். அதையடுத்து நீதிபதிகள், உயர் நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தை அரசு மீறியிருந்தால் அது தொடர்பாக வழக்கு தொடரலாம் என ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE