உதயநிதிக்கு எதிராக ரூ. 1 கோடி மான நஷ்டஈடு கோரி வழக்கு: பொள்ளாச்சி ஜெயராமன் ஆஜராகி சாட்சியம்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: அமைச்சர் உதயநிதிக்கு எதிராக ரூ.1 கோடி மான நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்த முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவரான பொள்ளாச்சி ஜெயராமன், உயர் நீதிமன்றத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணி செயலாளரான தற்போதைய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவரான பொள்ளாச்சி ஜெயராமனை தொடர்புபடுத்தி பேசியிருந்தார். அதையடுத்து தனக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி, தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக உதயநிதிக்கு எதிராக ரூ.1 கோடி மான நஷ்டஈடு கோரி பொள்ளாச்சி ஜெயராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மனுதாரரான பொள்ளாச்சி ஜெயராமன், மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க உத்தரவிட்டிருந்தது. அதன்படி மாஸ்டர் நீதிமன்றத்தில் நீதிபதி கிங்ஸ்லி கிறிஸ்டோபர் முன்பாக பொள்ளாச்சி ஜெயராமன் இன்று (செப்.10) ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ குறுக்கு விசாரணை நடத்தினார். குறுக்கு விசாரணை நிறைவடையாததால் நீதிபதி இந்த வழக்கை வரும் செப்.24-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE