காங்கயம் அருகே குடும்ப பிரச்சினையால் விபரீதம்: மாமனாரை சுட்டுக் கொன்று மருமகன் தற்கொலை

By செய்திப்பிரிவு

காங்கயம்: காங்கயம் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக, மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, மருமகன் நெற்றியில் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்த எல்லப்பாளையத்தை சேர்ந்த விவசாயி பழனிச்சாமி (70). இவரது மகள் அம்பிகாவின் கணவர் ராஜ்குமார் (50). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். படியூரில் குடும்பத்துடன் வசித்த ராஜ்குமார் அங்கு ஹாலோபிளாக் நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே பழனிச்சாமிக்கும், ராஜ்குமாருக்கும் பிரச்சினை இருந்துவந்தது. இரு குடும்பத்தினரும் பேசிக்கொள்ளாமல் இருந்தனர்.

இந்நிலையில், மாமனார் பழனிச்சாமியின் வீட்டுக்கு ராஜ்குமார் நேற்று காலை சென்றுள்ளார். அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பழனிச்சாமியை, ராஜ்குமார் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே பழனிச்சாமி ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர், குடும்பத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் அங்கிருந்து தப்பி, படியூர் பகுதிக்கு வந்த ராஜ்குமார், தனது நெற்றியில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார்.

பலத்த காயம் அடைந்த ராஜ்குமாரை அப்பகுதியினர் மீட்டு, காங்கயம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு, மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜ்குமார் உயிரிழந்தார்.

பழனிச்சாமி உடலுக்கு காங்கயம் அரசு மருத்துவமனையிலும், ராஜ்குமார் உடலுக்கு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.

சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ராஜ்குமார் தனது பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்துக்கொள்ள லைசென்ஸ் பெற்றுள்ளார். தனியாக வெளியே செல்லும்போது துப்பாக்கி எடுத்துச்செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக தம்பதியர் இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. நீண்ட காலமாக மாமனார் - மருமகன் இடையே பேச்சுவார்த்தை இல்லை.

இந்த நிலையில், சமீபத்தில் நடந்த திருமண நிகழ்வில் தந்தை பழனிச்சாமியும், மகள் அம்பிகாவும் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த கோபத்தில்தான் மாமனாரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். பின்னர், அங்கிருந்து படியூரில் உள்ள வீட்டுக்கு வந்த அவர் மனைவியிடம், ‘‘உன் தந்தையை சுட்டுக் கொன்றுவிட்டேன்’’ என்று கூறிவிட்டு, தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

மாமனாரை சுட்டுக் கொன்றுவிட்டு, மருமகன் நெற்றியில் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் காங்கயம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் குறித்து காங்கயம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE