மதுரையில் பாரா தடகள வீரருக்கு நேரில் திருமண வாழ்த்து கூறிய அமைச்சர் உதயநிதி

By சுப. ஜனநாயகசெல்வம்


மதுரை: பாரா தடகளப் போட்டிகளில் தொடர்ந்து சாதித்துவரும் பாரா தடகள வீரர் மனோஜ் என்பவருக்கு செப்.5-ல் திருமணம் நடந்தது. இந்நிலையில் இன்று (செப்.9) அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை அச்சம்பத்திலுள்ள அவரது வீட்டுக்கு நேரில் சென்று மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.

மதுரை அச்சம்பத்து பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ். மாற்றுத்திறனாளியான இவர் உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டியில் பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளார். மாவட்ட, மாநில, தேசிய மற்றும் உலக அளவிலான போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கங்கள் வென்றுள்ளார். இந்நிலையில், 2023-ல் ஜெர்மனியில் நடந்த சர்வதேச அளவிலான உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டியில் குண்டு எறிதலில் தங்கப்பதக்கம் வென்றார். நடப்பாண்டு தாய்லாந்தில் நடந்த வேர்ல்டு எபிலிட்டி ஸ்போர்ட்ஸ் போட்டிகளில் குண்டு எறிதலில் தங்கப்பதக்கம், வட்டு எறிதலில் வெள்ளிப்பதக்கம், ஈட்டி எறிதலில் வெண்கலப்பதக்கம் வென்றார்.

அதன்படி அமைச்சர் உதயநிதியிடமிருந்து விளையாட்டு வீரர்களுக்கான உயரிய தொகையாக ரூ.19 லட்சம் பெற்றார். மேலும் தமிழக அரசு சார்பில் விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மணப்பாறையிலுள்ள டிஎன்பிஎல் நிறுவனத்தில் இளநிலை அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் செப்.5-ம் தேதி மதுரையில் மனோஜ்-லோகப்பிரியாவுக்கு திருமணம் நடந்தது. திருமண விழாவுக்கு வருகைதருமாறு அமைச்சர் உதயநிதிக்கு மனோஜ் அழைப்பு விடுத்திருந்தார். அமைச்சர் உதயநிதியால் திருமணத்துக்கு வரமுடியவில்லை.

திங்கள்கிழமை மதுரையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க வந்த அமைச்சர் உதயநிதி, எதிர்பாராத வகையில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் மனோஜ் வீட்டுக்கு வருகை தந்தார். அங்கு சென்று தம்பதிக்குக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். அப்போது, ‘இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ள மனோஜ்-லோகப்ரியா இருவரும், கலைஞரும் தமிழும் போல, முதல்வரும் உழைப்பும் போல வாழ்வேண்டும்,’ என்று வாழ்த்தினார்.அப்போது அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் மற்றும் அவருடன் அவரது குடும்பத்தினர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE