அடையாற்றில் ரூ. 2.40 கோடியில் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணி தீவிரம் 

By பெ.ஜேம்ஸ் குமார்

தாம்பரம்: ரூ.2.40 கோடி மதிப்பில் அடையாற்றில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்றும் பணியில் நீர்வளத்துறை நிா்வாகம் ஈடுபட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூர் ஏரியில் இருந்து வரதராஜபுரம், பெருங்களத்தூர், திருநீர்மலை, அனகாபுத்தூர், பொழிச்சலூர், கவுல்பஜார், நந்தம்பாக்கம், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் ஆகிய பகுதிகளின் வழியாக 42 கிலோ மீட்டர் பயணித்து வங்க கடலில் அடையாறு ஆற்று தண்ணீர் கலக்கிறது. இது தவிர நந்திவரம், கூடுவாஞ்சேரி, மணிமங்கலம், படப்பை, சோமங்கலம், ஒரத்தூர், தாம்பரம், மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் வழிந்தோடி அடையாறு ஆற்றில் கலக்கிறது.

இந்நிலையில், மழை காலங்களில் அடையாற்றில் வெள்ளம் சீராக செல்லும் வகையில் ஆதனூரில் இருந்து பெருங்களத்தூர் வரை சுமார் 11 கிலோ மீட்டர் தூரம் வரை ஆற்றில் உள்ள் ஆகாய தாமரை செடிகள் ரூ. 90 லட்சத்தில் அகற்றும் பணிகளை நீர்வளத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் போல் விமான நிலையத்தில் இருந்து அடையாறு திருவிக மேம்பாலம் வரை சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் ரூ.1கோடியே 50 லட்சத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்து சுமார் 70 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது.

நீர்வளத் துறையினர் கூறியதாவது: ''அடையாறு ஆற்றில் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். ஆற்றில் ஆகாயத்தாமரை அதிக அளவில் இருப்பதால் மழைநீர் செல்வத்தில் சிக்கல் ஏற்படும். இதனை உணர்ந்து தமிழக அரசு உத்தரவின் பேரில் சுமார் ரூ. 2.40 கோடியில் தற்போது போர்க்கால அடிப்படையில் ஆகாயத்தாமரை அகற்றும்பணி பகுதிப் பகுதியாக நடைபெற்று வருகிறது.

இதுவரை 70% பணிகள் முடிவுற்றது. ஓரிரு வாரங்களில் அனைத்து பணிகளும் முடிந்து விடும் மழைநீர் ஆற்றில் செல்ல வசதியாக கிளை ஆறுகளை சீரமைக்கப்பட்டு வருகிறது. மழைநீர் அடையாறு ஆற்றிற்கு வருவதற்கும் ஆற்றில் தங்கு தடையின்றி செல்வதற்கும் அனைத்து முன்னெச்சரிக்கை பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE