பட்டியலின மாணவர்களுக்கான ‘சிரஸ்தா’ தேர்வை பெருமளவில் விளம்பரப்படுத்த ஐகோர்ட் உத்தரவு

By கி.மகாராஜன் 


மதுரை: மத்திய அரசின் குடியிருப்பு கல்வி திட்டத்துக்கான ‘சிரஸ்தா’ நுழைவுத் தேர்வு குறித்து பெருமளவில் விளம்பரப்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த செல்வகுமார் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: மத்திய சமூக நலத்துறை அமைச்சகம் ‘சிரஸ்தா’எனும் இலக்குப் பகுதிகளில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கான குடியிருப்புக் கல்விக்கான திட்டத்தை (SHRESHTA) செயல்படுத்தி வருகிறது. பட்டியலினத்தை சேர்ந்த மாணவர்களுக்கு தரமான உண்டு, உறைவிட கல்வியை வழங்கும் நோக்கில் ‘சிரஸ்தா’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் சேர தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு 9 வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.

இணையதளத்தில் தேர்வு அறிவிப்பு வெளியிட்டு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. தொடர்ந்து இணையதளம் வழியாக கலந்தாய்வு நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியிடப்படுகின்றன. இந்தாண்டு (2024) ஆண்டில் 9ம் வகுப்புக்கு 10,201 பேரும், 11 வகுப்புக்கு 8,993 பேர் பதிவு செய்துள்ளனர். ‘சிரஸ்தா’ தேர்வு தொடர்பான விபரங்கள் பட்டியலின மக்களுக்கு சரியாக தெரிவதில்லை. இதனால் பட்டியல் இனத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் அல்லது கல்வியறிவு பெற்றவர்களின் குழந்தைகள் மட்டுமே இத்திட்டத்தில் பயன் பெறுகினறனர்.

இதனால் ‘சிரஸ்தா’ திட்டத்துக்கான நுழைவுத் தேர்வை பெரியளவில் விளம்பரப்படுத்தி, தேர்வு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி விண்ணப்பிக்க போதுமான கால அவகாசமும் வழங்க வேண்டும். இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.எனவே, ‘சிரஸ்தா’ நுழைவுத் தேர்வு தொடர்பாக பெரியளவில் விளம்பரம் செய்யவும், இலக்கு பகுதியில தேர்வுக்காக சிறப்பு வகுப்புகள் நடத்தவும், பொதுமான கால அவகாசம் வழங்கி தேர்வு நடத்தவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு முனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், ‘சிரஸ்தா’ நுழைவுத் தேர்வு திட்டங்களை பெருமளவில் விளம்பரப்படுத்தினால் தான், பட்டியல் இன மாணவர்கள் குறிப்பாக கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் பயன் பெற இயலும். தற்போது இணையதள பயன்பாடு மிகவும் எளிதாகி விட்ட சூழலில், அந்த வசதியை மாணவர்களும், இளைஞர்களும் தவறான வழிகளில் அல்லாமல் ஆக்கபூர்வமாக பயன்படுத்த வேண்டும். ‘சிரஸ்தா’ தேர்வு குறித்து பெருமளவில் விளம்பரப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை செப். 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE