தவெக கட்சியில் இணைகிறாரா செஞ்சி ராமச்சந்திரன்? - எடப்பாடி பழனிசாமி மறுப்பு

By வி.சீனிவாசன்

சேலம்: “செஞ்சி ராமச்சந்திரன் அதிமுகவில் இருந்து தவெக கட்சிக்கு செல்வதாகச் சொல்வது வதந்தி” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம் ரெட்டியூர் நரசோதிபட்டி பகுதியில் உள்ள ஸ்ரீ ராஜகணபதி கோயில் மற்றும் ஸ்ரீ கண்ணனூர் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிலையில், இன்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஸ்ரீ கண்ணனூர் மாரியம்மன் மற்றும் ராஜ கணபதி கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூசியது: 'ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் முழுமையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதுதான் அரசின் கடமை. பரந்தூர் விமான நிலைய பணிகள் தொடங்கியதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அரசு விவசாயிகளை அழைத்து பேசி தீர்வு காண வேண்டும். ஒரு குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக தீர்வு காண வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் சரியாக கவனிக்கப்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. நாங்கள் சுட்டிக்காட்டியும் குறைகளை ஆய்வு செய்து சரிசெய்வதை விட்டுவிட்டு, எனக்கு எதிராக குறை சொல்லி வருகிறார்கள். செஞ்சி ராமச்சந்திரன் அதிமுகவில் இருந்து தவெகவுக்கு செல்வதாக அவர் சொன்னாரா? இது வதந்தி. அதிமுக மிகப் பெரிய கடல், ஆயிரக்கணக்கான பேர் இருக்கிறார்கள். 30 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி அதிமுக'' என்று அவர் கூறினார். முன்னதாக, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் செஞ்சி ராமச்சந்திரன் இணையவுள்ளதாக தகவல்கள் பரவியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE