31 அம்ச கோரிக்கைகளை அரசு ஏற்காததால் திட்டமிட்டபடி நாளை வேலைநிறுத்தம்: டிட்டோஜாக் கூட்டமைப்பு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: கோரிக்கைகள் குறித்த சாதகமான அறிவிப்பு வெளியிடாததால் திட்டமிட்டபடி ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம் நாளை நடைபெறும் என டிட்டோஜாக் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், தமிழக அரசு இதுவரை கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. இந்நிலையில் டிட்டோஜாக் கூட்டமைப்பு சார்பில் செப். 10-ம் தேதி ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ் தலைமையில் டிட்டோஜாக் அமைப்பின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை கடந்த செப்டம்பர் 6-ம் தேதி நடைபெற்றது.

இதில் ஆசிரியர்கள் வைத்துள்ள கோரிக்கைகளில் 11 ஏற்கப்பட்டிருந்தன. அவற்றில் 9 செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், 2 நீதிமன்ற வழக்குகளால் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஏற்கப்பட்ட கோரிக்கைகளின் தற்போதைய நிலை குறித்தும் கல்வித்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக விவாதிப்பதற்காக டிட்டோஜாக் மாநில உயர்மட்டக் குழு கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது. இதில் டிட்டோஜாக் மாநில நிர்வாகிகள் அ.வின்சென்ட் பால்ராஜ், ச.மயில், இரா.தாஸ், ஜான் வெஸ்லி உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் விவரம் வருமாறு; தமிழக அரசின் அறிவிப்பில் பெரும்பாலான முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பான சாதகமான தகவல் இடம்பெறவில்லை.

எனவே, ஏற்கெனவே திட்டமிட்டபடி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நாளையும் (செப். 10), தலைமைச் செயலகம் முற்றுகைப் போராட்டம் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 1-ம் தேதி வரையிலும் 3 நாட்கள் நடத்தப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE