திருமாவளவன் தலைமையில் மண்டல வாரியாக செயற்குழு கூட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: விசிக மகளிரணி சார்பில் நடைபெறும் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டை ஒருங்கிணைப்பது தொடர்பாக கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் மண்டல வாரியாக செயற்குழு கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன.

இது தொடர்பாக அக்கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் அக். 2-ம் தேதி விசிக மகளிரணி சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு நடைபெறவுள்ளது. இதையொட்டி, நிர்வாகிகளுடன் கட்சித் தலைவர் திருமாவளவன் காணொலி வாயிலாக கடந்த 2 நாட்களாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

அப்போது பல அறிவுறுத்தல்களை நிர்வாகிகளுக்கு வழங்கிவருகிறார். அதேநேரம், மாநாட்டை ஒருங்கிணைக்க செப்.10முதல் 6 நாட்கள் திருமாவளவன் சுற்றுப்பயணம் மேற்கொள்ளஇருப்பதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. அந்த திட்டம் தற்போது 8 நாட்களாக மாற்றப்பட்டு, மண்டல வாரியாக செயற்குழு கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை (செப்.10) காலை சென்னையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்து மாநாடு மற்றும் சுற்றுப்பயணம் தொடர்பாக விளக்குகிறார். அன்றைய தினம் மாலை மரக்காணத்திலும், 11-ம் தேதி காலை கள்ளக்குறிச்சியிலும் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை சந்திக்கிறார்.

இதைத் தொடர்ந்து, செப்.20 வரையிலான 8 நாட்களில் திருமாவளவன் தலைமையில் மண்டல வாரியாக செயற்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு, மாநாட்டுக்கான ஒருங்கிணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE