“இந்து மதத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்களுக்கு திமுக துணை நிற்கிறது” - அர்ஜூன் சம்பத் விமர்சனம்

By இரா.நாகராஜன்

திருவள்ளூர்: இந்து சமயத்துக்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரம் செய்பவர்களுக்கு திமுக துணை நிற்கிறது என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் என்.ஜி.ஓ., நகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு இன்று மாலை அர்ஜூன் சம்பத் பூஜை செய்து வணங்கினார். அப்போது, அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: “இந்து சமயத்துக்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரம் செய்பவர்களுக்கு திமுக துணை நிற்கிறது. இந்த நிலை மாறவேண்டும்.

தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறை அரசு உதவி பெறும் கிறிஸ்தவ பள்ளிகளில் பைபிள் விநியோகம் செய்யப்படுகிறது. இதை யாரும் கேட்பதில்லை. ஆனால் சென்னையில் அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ‘பரம்பொருள் அறக்கட்டளை’ என்ற அமைப்பைச் சேர்ந்த மகாவிஷ்ணு, சமீபத்தில் ஆற்றிய சொற்பொழிவில் திருக்குறள் பேசி அதற்குண்டான பொருள் குறித்து பேசினார்.

அதில் அந்த பள்ளியில் கம்யூனிஸ்ட் சிந்தனையுள்ள மாற்றுத்திறனாளி ஆசிரியர் வேண்டுமென்றே எந்தவித சகிப்புத்தன்மை இல்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். மகாவிஷ்ணுவை தீவிரவாதியை கைது செய்வது போல், கைது செய்துள்ளனர். மகாவிஷ்ணுவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இல்லையெனில் இந்து மக்கள் கட்சி சார்பில் அறப்போராட்டம் நடைபெறும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உளளது. தமிழகத்தில் பட்டியலின மக்கள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” இவ்வாறு அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE