வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் - தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

By ச.கார்த்திகேயன்

சென்னை: "வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை மேற்கு வங்கும், ஒடிசா இடையே கரையை கடக்கக்கூடும்" என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றுள்ளது. இது ஆந்திர மாநிலம் கலிங்கபட்டினத்துக்கு கிழக்கே 280 கி.மீ தொலைவிலும், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு தென்கிழக்கே 230 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாளை ஒடிசா மாநிலம் பூரி, மேற்கு வங்க மாநிலம் திகா கடற்கரை இடையே கடக்கக் கூடும்.

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். 10 முதல் 14-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்கோனாவில் 5 செமீ, வால்வாறை, சின்னக்கல்லாரில் தலா 4 செமீ, செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம், திருவண்ணாமலை மாவட்டம் செய்யார், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் தலா 3 செமீ, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத், கோவை மாவட்டம் சோலையார், வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா, ஆற்காடு, திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், நீலகிரி மாவட்டம் பந்தலூர் ஆகிய இடங்களில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.

மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE