சென்னை: படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்வலர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள், சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி வளாகத்தில் 500 ஆர்வலர்களுக்கும் மற்றும் சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300 ஆர்வலர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேற்படி போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் ஆர்வலர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணையவழியாக விண்ணப்பங்கள் பெற்று, புதிதாக சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை ஆறு மாத காலம் வாராந்திர வேலை நாட்களில் நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் ஆர்வலர்கள் குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 01-01-2024 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேற்படி போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவு மற்றும் தங்கும் வசதிகள் இல்லை.
பயிற்சியில் சேர விரும்பும் ஆர்வலர்கள் போட்டித் தேர்வுகள் பயிற்சி மைய இணையதளம் www.cecc.in வாயிலாக 10.09-2024 முதல் 24.09.2024 வரை விண்ணப்பிக்கலாம். பயிற்சி வகுப்புகளில் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044 - 25954905 மற்றும் 044 - 28510537 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
» ‘‘தமிழர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் தாய்வீடாக தமிழகம் இருக்கிறது’’ - முதல்வர் உரை @ சிகாகோ
» கடந்த 3 ஆண்டுகளில் தமிழகம் பெற்ற தொழில் முதலீடுகள் எவ்வளவு? - வெள்ளை அறிக்கை கோரும் அன்புமணி
பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழக அரசால் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள இனவாரியான இடங்களுக்கு ஏற்ப ஆர்வலர்கள் தெரிவு செய்யப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரங்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியிடப்படும். அக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.