ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்தில் நிறுத்தப்படும் படகுகளுக்கு செப்.10 முதல் கட்டணம் வசூல்!

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்தில் நிறுத்தப்படும் படகுகளுக்கு செப்டம்பர் 10 முதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ராமேசுவரத்தில் மீன்பிடி இறங்குதளம் ரூ.22 கோடி செலவில் புதுபித்தல் மற்றும் மறுசீரமைப்பு பணிகள் நிறைவு செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்து, கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி அன்று மீனவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த மீன்பிடி இறங்கு தளத்தின் பராமரிப்பு பணிகளுக்காக இரண்டு காவலர்கள், ஒரு தூய்மை பணியாளரை நியமிப்பது , படகுகளின் பராமரிப்பு பணிகளுக்கான மின்கட்டணம் செலுத்துதல் ஆகியவற்றுக்கான ராமேசுவரம் மீன்பிடி இறங்குதள மேலாண்மை குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்தில் நிறுத்தம் செய்யப்படும் விசைப்படகுக்கு ரூ.100, நாட்டுப்படகுக்கு ரூ.50, இறால் மற்றும் மீன் நிறுவனங்களுக்கு மாதம் ரூ.1000 வீதம் வசூல் செய்யவும், கரை திரும்பிய படகு மீன்பிடி இறங்குதளத்தில் மீன் இறக்கும் போது நாளொன்றுக்கு ரூ.200, இறால் ஏற்றிச்செல்லும் நான்கு சக்கர வாகனத்துக்கு ரூ. 50, ஆறு சக்கரம் வாகனத்துக்கு ரூ.100 நாளொன்றுக்கு வசூலிப்பது மற்றும் வெல்டிங் செய்திட மின் கட்டணமாக ஒரு மணி நேரத்துக்கு ரு.200 வீதம் வசூல் செய்யவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மீன்பிடி இறங்குதள மேலாண்மை குழு கூட்டம் மூலம் நிறைவேற்றப்பட்ட மேற்கண்ட தீர்மானங்களை அனைத்து விசைப்படகு, நாட்டுப்படகு, மீனவர் சங்க உறுப்பினர்கள், மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து செப்டம்பர் 10-ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வருவதாக மீன்வளத்துறை சார்வாக மீனவ சங்கங்களுங்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE