விழுப்புரம் நகரில் ஷேர் ஆட்டோ பிரச்சினை: தீர்வுக்கு ஆட்சியரிடம் மனு

By எஸ். நீலவண்ணன்

விழுப்புரம்: விழுப்புரம் ஆட்சியரிடம் இன்று மக்கள் உரிமைகள் கழகத்தின் முதன்மை செயலாளர் கந்தன் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: "விழுப்புரம் நகரில் இயங்கும் சுமார் 50 ஷேர் ஆட்டோ. 40 நான்கு சக்கர வாகன மீட்டர் டாக்சி ஷேர் ஆட்டோக்களாக ஒரே நேரத்தில், ஒரே பகுதியில் பயணிக்கிறது அதனால் 50 சதவீத போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்துகிறது.

உதாரணமாக, புதிய பேருந்து நிலையம் முதல் ரயில்வே ஜங்ஷன் வரை ஒரு சில ஆட்டோக்களும், புதிய பேருந்து நிலையம் முதல் கம்பன் நகர் வரையும் , ஒரு சில ஆட்டோக்களும் கிழக்கு பாண்டி ரோடு, ஆஞ்சநேயர் கோவில் வரையிலும், ஒரே சாலையில் பயணிப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்துகின்றது. இதை தவிர்க்க ஷேர் ஆட்டோக்கள் மற்றம் நான்கு சக்கர மீட்டர் டாக்ஸியை, நான்கு பகுதியாக பிரித்து சிக்னல் முதல் கோலியனூர் வரையிலும், சிக்னல் முதல் கண்டனமானடி வரையிலும், சிக்னல் முதல் சென்னை நெடுஞ்சாலை E.S கல்லூரி வரையிலும், சிக்னல் முதல் மாம்பழப்பட்டு ரோடு வெங்கடேசபுரம் வரை பிரித்து பயணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும், மூன்று சக்கர மீட்டர் ஆட்டோக்கள் அளவுக்கு மீறி விழுப்புரம் நகரில் கால் வைக்கும் இடமெல்லாம் ஆட்டோக்களாக உள்ளது. அவர்களும் ஷேர் ஆட்டோக்கள் போல இயங்கி வருவதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இனி வரும் காலங்களில் 3 + 1 மீட்டர் ஆட்டோவுக்கு பெர்மிட் வழங்காமல் தடை செய்ய வேண்டும் என விழுப்புரம் நகர மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்" என்று அம்மனுவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE