11 தமிழக மீனவர்கள் விடுதலை: படகு உரிமையாளர் ஆஜராக இலங்கை நீதிமன்றம் உத்தரவு

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக விசைப்படகு மீனவர்கள் 11 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்தும், படகின் உரிமையாளர் ஆவணங்களுடன் நேரில் ஆஜராகவும் பருத்தித்துறை நீதிமன்றம் இன்று (செப்.6) உத்தரவிட்டுள்ளது.

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சாந்தி பழனிசாமி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற நாகரத்தினம், சஞ்சய், பிரகாஷ், சுதந்திர சுந்தர், சந்துரு, ரமேஷ், ஆனந்தவேல், சிவராஜ், வர்ஷன், சுமன், ராஜேந்திரன் ஆகிய 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதியன்று சிறைப்பிடித்தனர். இந்த 11 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை, பருத்தித்துறை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷாந்தன் இந்த 11 மீனவர்கள் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் 11 மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும்,2025 பிப்.14ம் தேதி அன்று படகின் உரிமையாளர் ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார். விடுதலை செய்யப்பட்ட 11 மீனவர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE