மாஹே - புதுச்சேரி அரசுப் பேருந்தில் கூடுதல் பயணிகளை ஏற்றிய விவகாரம்: ஆளுநர் விசாரணைக்கு உத்தரவு

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: மாஹேயில் இருந்து புதுச்சேரிக்கு வந்த அரசுப் பேருந்தில் கூடுதல் பயணிகள் ஏற்றிய விவகாரம் தொடர்பாக எம்எல்ஏ ஆதாரத்துடன் புகாராளித்ததை அடுத்து அதுகுறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரியில் நான்கு பிராந்தியங்கள் உள்ளன. அதில் புதுச்சேரியும், காரைக்காலும் தமிழகம் அருகேயும், ஆந்திரம் அருகே ஏனாமும், கேரளம் அருகே மாஹேவும் உள்ளன. மாஹே பிராந்தியம் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அருகே உள்ளது. அங்கிருந்து தினமும் மாஹே - புதுச்சேரி இடையே புதுச்சேரி அரசுப் போக்குவரத்து கழக பேருந்து (பிஆர்டிசி) இயக்கப்படுகிறது.

மொத்தம் 52 பேர் அமரும் வகையில் இருக்கைகள் கொண்ட இந்தப் பேருந்து நேற்று இரவு புறப்பட்டது. இப்பேருந்தில் அனைத்து இருக்கைகளும் நிரம்பிய நிலையில் அதிகப்படியாக வந்த பயணிகளையும் நடத்துநர் ஏற்றியுள்ளார். அவர்கள் நடைபாதையில் அமர்ந்து பயணித்துள்ளனர். கூடுதலான எண்ணிக்கையில் பேருந்தில் பயணிகள் இருந்ததால் ஏற்கெனவே முன்பதிவு செய்து இருக்கையில் அமர்ந்தவர்களுக்கு அசவுகரிகரியம் ஏற்பட்டு அவர்கள் நடத்துநருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

”இத்தனை நெருக்கடியுடன் சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக பேருந்தில் பயணிப்பது மிக கஷ்டம். கூடுதல் பயணிகளை ஏற்றுவது அபாயகரமானது” என அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு நடத்துநர், “அவர்களும் பயணிகள் தான்” எனக் கூறி எதிர்வாதம் செய்துள்ளார். இதனால், கூடுதல் பயணிகளை ஏற்றிக் கொண்டு அந்தப் பேருந்து புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தது.

இதனை வீடியோ எடுத்தவர்கள் மாஹே எம்எல்ஏ உள்ளிட்டோருக்கு அனுப்பினர். இந்த வீடியோவை மாஹேயில் அரசுமுறை பயணம் சென்றுள்ள துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனிடம் மாஹே சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் பரம்பத் காண்பித்து புகாராக தெரிவித்தார். இதனையடுத்து உடனடியாக இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்..

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE