தமிழக மக்களிடம் மன்னிப்பு கோரியதால் மத்திய இணை அமைச்சர் மீதான வழக்கை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில், தமிழர்களைத் தொடர்புபடுத்தி மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே பேசியது சர்ச்சைக்குள்ளானது.

இதுதொடர்பாக மதுரை சைபர் கிரைம் போலீஸார் அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஷோபா கரந்தலஜே, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், தனது கருத்துக்காக தமிழக மக்களிடம் மன்னிப்பு கோரியும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜேவின் பிரமாண மனுவை ஏற்றுக்கொள்வதாக தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தெரிவித்தார்.

அதையடுத்து நீதிபதி, இதுதொடர்பாக ஷோபா கரந்தலஜே தாக்கல் செய்திருந்த மனுவை ஏற்று அவர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE