“கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தால் சாத்தியமான கனவு!” - கோவை ஆட்சியரிடம் பயனாளி பெருமிதம் 

By இல.ராஜகோபால்

கோவை: புது வீடு கட்டும் கனவு, தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தால் சாத்தியமாகி இருப்பதாக ‘நிறைந்தது மனம்’ நிகழ்வில் காரமடையைச் சேர்ந்த பயனாளி கோவை ஆட்சியரிடம் தெரிவித்தார்.

காரமடை ஊராட்சி ஒன்றியம் பெள்ளாதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மற்றும் ஊரக வீடுகள் பழுது நீக்கும் திட்டம் ஆகிய திட்டங்களின் மூலம் பயன்பெற்ற பயனாளிகளிடம் ‘நிறைந்தது மனம்’ நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று கலந்துரையாடினார். அப்போது மாவட்ட ஆட்சியர் பேசியது: ''பொதுமக்களிடம் அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், 'நிறைந்தது மனம்' நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

ஊரக வளர்ச்சித் துறையின்கீழ் கிராமச் சாலை மேம்பாட்டு ஜல்ஜீவன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மேலும், ஊரகப் பகுதி மக்களின் நலனுக்காகவும் அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் முதல் கட்டமாக 1 லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். ஒவ்வொரு வீடும் 360 சதுர அடி பரப்பளவில் அறை, சமையலறை, கழிப்பறை வசதிகளுடன் அமைக்கப்படுகின்றன. இதற்கு அரசு சார்பில் ரூ. 3 லட்சம் வழங்கப்படுகிறது. மேலும், யாராவது தங்களது வீடுகளில் கூடுதல் வசதிகள் செய்ய விரும்பினால் ரூ.1.50 லட்சம் வரை கடனுதவி வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-25-ம் ஆண்டில் 1,445 வீடுகள் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டு வேலை உத்தரவு வழங்கி பணிகள் நடைபெற்று வருகின்றன. காரமடை வட்டாரத்தில் மட்டும் 435 பயனாளிகள் இத்திட்டம் மூலம் பயன்பெறவுள்ளனர். பெள்ளாதி ஊராட்சி வெண்மணி நகரில் ஜான்சிராணி என்பவர், 'இதற்கு முன்பு ஓட்டு வீட்டில் வசித்தோம். வீட்டின் மேற்பகுதி சேதமடைந்ததால் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் எங்களுக்கு தற்போது புதியதாக வீடு கட்டப்பட்டு வருகிறது. புதுவீடு என்பது கனவாக இருந்த எங்களுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் இது சாத்தியமாகி இருக்கிறது' என நிறைந்த மனதுடன் நன்றி தெரிவித்தார்.'' இவ்வாறு ஆட்சியர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE