புதுச்சேரி: தவெக கொடியுடன் வந்து ‘தி கோட்’ படத்தை வரவேற்று கொண்டாடிய  விஜய் ரசிகர்கள்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் விஜய் ரசிகர்கள் தவெக கொடியுடன் தியேட்டர்களுக்கு வந்து ‘தி கோட்’ திரைபடத்தை உற்சாகமாய் வரவேற்றுக் கொண்டாடினர்.

பெருத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், விஜய் நடித்த ‘தி கோட்’ திரைப்படம் தமிழகம், புதுச்சேரி உள்பட உலகெங்கும் இன்று (செப்.5) வெளியானது. புதுச்சேரியில் உள்ள ஒட்டுமொத்த திரையரங்கு களிலும் இன்று ‘தி கோட்’ திரைப்படம் ரிலீஸாகியுள்ளது.

இதையடுத்து, பல திரையரங்குகள் முன்பு காலை 7.30 மணிக்கே ரசிகர்கள் குவிய தொடங்கினர். தவெக கட்சி கொடி ஏந்தி விஜய் உருவ படத்துடன் வந்த ரசிகர்கள் திரையரங்கம் முன்பு வாத்தியங்கள் முழங்க ஆட்டம், பாட்டத்துடன் காத்திருந்தனர்.

பின்னர் திரையரங்கம் திறந்தவுடன் தவெக கட்சி கொடியை உயரே தூக்கிப் பிடித்தபடி விஜய்க்கு வாழ்த்து கோஷம் எழுப்பியபடி தியேட்டருக்குள் நுழைந்தனர். படத்தின் டைட்டில் ஓடத் தொடங்கியது முதல் விஜய்யின் அறிமுக காட்சி வரை ரசிகர்கள் உற்சாகத்துடன் விசில் அடித்து படத்தை வரவேற்றனர். விஜய் திரையில் தோன்றும் வரை ரசிகர்கள் இருக்கையில் உட்காராமல் உற்சாகத்துடன் ஆரவாரம் செய்தனர்.

முன்னதாக திரையரங்கம் முன்பு மேளதாளத்துடன் விஜய்யின் உருவ படத்தை வைத்து ரசிகர்கள் நடனம் ஆடி மகிழ்ந்தனர். இதேபோல் புதுவையில் உள்ள மால் உள்ளிட்ட அனைத்துத் திரையரங்கிலும் இன்று முதல் 8-ம் தேதி வரை 4 நாட்கள் சிறப்புக் காட்சியுடன் தினமும் 5 காட்சிகள் ‘தி கோட்’ திரைப்படம் திரையிடப்படுகிறது. இதனால் புதுவை நகர பகுதியில் உள்ள அனைத்து திரையரங்குகள் முன்பும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் நகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE