இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு ரூ.5.40 கோடி அபராதம்: பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க தலைவர்கள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை வழக்கில் இருந்து விடுவிக்கவும், அபராதத்தில் இருந்து அவர்களை பாதுகாக்கவும் பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், பாமக கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளார்.

தூத்துக்குடி, தருவைக்குளத்தில் இருந்து கடந்த ஜூலை 21-ம் தேதி ஒரு படகில் 12 பேர் மீன்பிடிக்க சென்றனர். அதேபோல, 23-ம் தேதி 10 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் 22 பேரும் நடுக்கடலில் மீன்பிடித்து விட்டு கடந்த 5-ம் தேதி திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

6 மாத சிறை தண்டனை: அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி நுழைந்ததாக கூறி 22 மீனவர்களையும், 2 படகுகளையும் சிறைபிடித்து சென்றனர். 22 மீனவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் முதலில் 12 மீனவர்களுக்கு தலா ரூ.42 லட்சம் அபராதம் செலுத்தவும், அப்படி செலுத்த தவறினால் 6 மாத சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு கூறப்பட்டது. இந்த தீர்ப்பின்படி 12 பேருக்கும் ரூ.5.40 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு படகில் இருந்த 10 மீனவர்கள் மீதான வழக்கு விசாரணையில் இருக்கிறது. அவர்களுக்கும் அபராதத் தொகை விதிக்கப்படும் என்று தெரிகிறது. இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள் ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியுள்ளதாவது:

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு ரூ.5.40 கோடி அபராதம் விதிக்கப்பட் டிருப்பது தமிழக மீனவர்களிடம் கடும் அதிர்ச்சி, மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதை மோடி அரசு வேடிக்கை பார்ப்பது மிகவும் கண்டனத்துக்கு உரியது. கடந்த 2016-ம் ஆண்டு 2 நாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது. இதில் இரு நாட்டு வெளியுறவு துறை செயலர்கள், அதிகாரிகள், தமிழக பிரதிநிதிகள் இடம்பெற்றிருந்தனர். இந்த குழு கடந்த 2020 ஜனவரிக்கு பிறகு இதுவரை கூட்டப்படவே இல்லை. 6 மாதத்துக்கு ஒருமுறை இக்குழு கூடி மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். நடுக்கடலில் மீனவர்கள் தாக்கப்படும்போது, இதுகுறித்து தகவல் தெரிவிக்க ஹாட்லைன் அமைக்கப்பட்டது. அதுவும் இப்போது செயல்படவில்லை. எனவே, பிரதமர் மோடி உடனடியாக தலையிட்டு தமிழக மீனவர்களை வழக்கில் இருந்து விடுவிப்பதோடு, அபராதம் செலுத்துவதில் இருந்தும் மீனவர்களை பாதுகாக்க வேண்டும். இதுதொடர்பாக பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்த வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்: இலங்கை நீதிமன்றம் தமிழக மீனவர்களை தண்டனை விதித்து தாக்குதல் நடத்தும் நிலைக்கு சென்றிருப்பது பெரும் கவலை அளிக்கிறது. மத்திய அரசு உடனடியாக இலங்கை அரசுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களின் மீன்பிடி உரிமையை பாதுகாக்க வேண்டும். இலங்கை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய, தூதரகம் மூலமாக மத்திய அரசு சட்டரீதியான உதவி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்க வேண்டும்.

பாமக தலைவர் அன்புமணி: பாரம்பரியமாக மீன் பிடிக்கும் பகுதிகளில் மீன் பிடித்ததற்காக தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வதையும், சிறையில் அடைப்பதையும் இந்திய அரசு வேடிக்கை பார்க்க கூடாது. இலங்கை அரசின் வாழ்வாதார ஒழிப்பு சதிக்கு மத்திய அரசு உடனே முடிவு கட்ட வேண்டும். மிகக்குறுகிய பரப்பளவை கொண்ட தமிழக - இலங்கை கடல் எல்லையை இரு தரப்பு மீனவர்களும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பகிர்ந்து கொண்டு மீன் பிடிப்பதுதான் இந்த சிக்கலுக்கு தீர்வு ஆகும். கடந்த காலங்களில் பலமுறை இத்தீர்வு முன்வைக்கப் பட்டுள்ளது. இதை உணர்ந்துகொண்டு, தமிழக மீனவர்கள், இலங்கை மீனவர்கள், தமிழக அரசு, இலங்கை அரசு ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுகளுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE