கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பான வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி

By செய்திப்பிரிவு

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தொடரப்பட்ட வழக்கில், எதன் அடிப்படையில் மாவட்ட எஸ்பி-யின் இடைநீக்கம் திரும்பப் பெறப்பட்டது என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி அதிமுக சார்பில் ஐ.எஸ்.இன்பதுரை, பாமக சார்பில் கே.பாலு, பாஜக சார்பில் ஏற்காடு ஏ.மோகன்தாஸ், தேமுதிக சார்பில் பார்த்தசாரதி மற்றும் வால்பாறை முன்னாள் எம்எல்ஏ டாக்டர் தரன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக 7 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் அரசியல் ரீதியாகவோ அல்லது அதிகாரிகள் மற்றும் காவல் துறையினருக்கு தொடர்பு இருப்பதாகவோ தெரியவில்லை. குற்றம்செய்த அனைவரும் கைதாகி விட்டனர். உயிரிழப்பு சம்பவத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை. அதேபோல இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்குள்ளானவர்களும், இறந்தவர்களும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இல்லை என்றனர்.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, ஒவ்வொரு ஆண்டும் கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவங்கள் தமிழகத்தில் நடந்து கொண்டே இருக்கின்றன. எனவேஇந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். தமிழகத்தில் கஞ்சாவையும், கள்ளச்சாராயத்தையும் போலீஸாருக்கும், அதிகாரிகளுக்கும் தெரியாமல் விற்க முடியாது என வாதிட்டார். அதையடுத்து நீதிபதிகள், ‘‘கள்ளச்சாராய மரணம் தொடர்பாகபோலீஸாருக்கு எப்போது தகவல்கிடைத்தது, முதல் உயரிழப்பு எப்போது நடந்தது, யார், யார்எந்தெந்த மருத்துவமனையில்சேர்க்கப்பட்டனர், பலர் இறந்துவிட்டனர் என மருத்துவர்கள் தகவல்தெரிவித்த பிறகுதான் போலீஸாருக்கு தகவல் தெரியுமா, உயிரிழப்பு சம்பவத்துக்கு கள்ளச்சாராயம் காரணமல்ல என எதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார், பின்னர் எதற்காக மாவட்டஎஸ்பி-யை பணியிடை நீக்கம் செய்தீர்கள், பின்னர் எதன் அடிப்படையில் எஸ்பி-யின் இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டது, மற்ற போலீஸார் மீதான நடவடிக்கைகளும் ரத்து செய்யப்பட்டு விட்டதா, ஒருமாதத்தில் என்ன மாறுதல் நடந்து விட்டது என்பதற்காக எஸ்பி மீதானநடவடிக்கை திரும்பப் பெறப்பட்டது, இல்லையென்றால் எந்த ஆதாரமும் இல்லாமல் எஸ்பி-யை இடைநீக்கம் செய்தீர்களா" என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு தரப்பில், ‘‘இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டனர் என்பதால், எஸ்பி மீதானநடவடிக்கை திரும்பப் பெறப்பட்டது. மற்ற போலீஸார் மீதான நடவடிக்கையைப் பொருத்தமட்டில் அரசின் விளக்கத்தைக் கேட்டுதெரிவிக்கப்படும்" என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதில் எத்தனை வழக்குகளில் எத்தனை பேருக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது என்றவிவரங்களை மாவட்ட வாரியாக தாக்கல் செய்ய வேண்டும் என அரசுதரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE