சென்னை: மத்திய மீன்வளத் துறை அமைச்சகத்தின் சார்பில், ‘பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீன் உற்பத்தி, மீன் வளத்தைப் பெருக்குதல், தொழில்நுட்பம், மீன்பிடிக்கு முந்தைய காலங்களுக்கான உள்கட்டமைப்பை ஏற்படுத்துதல், நவீன மீன்பிடி நடவடிக்கைகள் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.
மேலும், இந்த திட்டத்தின்கீழ் மீன் உற்பத்தியை அதிகரிப்பது, மீன்பிடி பரப்பளவை விரிவுபடுத்துவது, மீன்பிடி பணிகளை வகைப்படுத்துவது, ஆழ்கடல் மீன்பிடித்தலை ஊக்கப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்திட்டத்துக்கு ரூ.20,050 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக மீன் உற்பத்தி தொழில்களை மேலும் மேம்படுத்த, பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தின்கீழ், ரூ.932.39 கோடி ஒதுக்கீடு செய்யும்படி தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து, கடந்த 4 ஆண்டுகளில் ரூ.375.44 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதன்மூலம், 1.75 லட்சம் மீனவர் குடும்பங்கள் பயன் அடைந்துள்ளதாக மத்திய மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.