தீபாவளி முன்பதிவு தொடக்கம்: 130 பேருந்துகளின் பயணச் சீட்டுகள் விற்றுத் தீர்ந்தன!

By செ.ஆனந்த விநாயகம்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு தொடங்கி வேகமாக இருக்கைகள் நிரம்பி வருகின்றன. சுமார் 130-க்கும் மேற்பட்ட பேருந்து இருக்கைகளுக்கான முன்பதிவு முற்றிலுமாக நிறைவடைந்துள்ளன.

இது தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியது: “ஆண்டுதோறும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளையொட்டி அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த ஆண்டும் மாநிலம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில், சென்னையில் இருந்து மட்டும் 3 நாட்களில் இயக்கப்பட்ட பேருந்துகள் மூலம் 5.66 லட்சம் பேர் பயணித்திருந்தனர்.

அரசுப் பேருந்துகளைப் பொறுத்தவரை வழக்கமாக ஒரு மாதத்துக்கு முன்பு தான் இருக்கையை முன்பதிவு செய்ய முடியும். தற்போது 2 மாதங்களுக்கு முன்னதாகவே முன்பதிவு செய்யும் வகையில் நடைமுறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தீபாவளி பண்டிகையையொட்டி அரசுப் பேருந்துகளின் முன்பதிவு தொடங்கி வேகமாக நடைபெற்று வருகிறது. நடப்பாண்டில் அக்.31-ம் தேதி (வியாழக்கிழமை) தீபாவளி கொண்டாடப்படுகிறது.

இதற்கு முந்தைய 2 நாட்களைப் பொறுத்தவரை முன்பதிவு தொடங்கியுள்ள பேருந்துகளின் இருக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அக்.29-ம் தேதி பயணிக்க தமிழகம் முழுவதும் 9,500-க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இதில், சென்னையில் இருந்து பயணிக்க 7,200-க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து 30-ம் தேதியும் மாநிலம் முழுவதும் 7,900-க்கும் மேற்பட்ட இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் இருந்து மட்டும் 5,900-க்கும் மேற்பட்ட இருக்கைகளின் முன்பதிவு முடிவடைந்துள்ளன.

இதன்படி கணக்கில் கொண்டால் சுமார் 130-க்கும் மேற்பட்ட பேருந்து இருக்கைகளுக்கான முன்பதிவு முற்றிலுமாக நிறைவடைந்துள்ளன. தீபாவளி பண்டிகைக்கு சுமார் 2 மாதங்கள் இருக்கும்போதே 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருக்கைகள் முன்பதிவு முடிவுற்ற நிலையில், வரும் நாட்களில் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும். இதற்கேற்ப சிறப்புப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை தயாராக உள்ளது.

இது தொடர்பாக அக்டோபர் மாதத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை நடைபெற்று, சிறப்புப் பேருந்து தொடர்பான அறிவிப்பு வெளியாகும். அரசுப் போக்குவரத்துக் கழக www.tnstc.in இணையதளம் அல்லது டிஎன்எஸ்டிசி செயலி வாயிலாக பேருந்து இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதுதவிர, பேருந்து நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம்,” என்று அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE