தமிழகத்தில் போதை பொருட்கள் தாராளமாக கிடைப்பது தெரியாதா? - போலீஸாருக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் போதை பொருட்கள் தாராளமாகக் கிடைப்பது போலீஸாருக்குத் தெரியாதா? என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். சென்னையில் உள்ள குடிசைவாசிகளை அப்புறப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2017-ம் ஆண்டு ‘பெண்ணுரிமை இயக்கம்’ என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதில், ‘‘குடிசைவாசிகளுக்கு கண்ணகி நகர், பெரும்பாக்கம், துரைப்பாக்கம் உள்ளிட்ட 4 இடங்களில் மாற்று குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அங்கு கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு எந்தவொரு வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை’’ என குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த4 இடங்களிலும் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து 2018-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

வழக்கறிஞர் ஆணையர் அறிக்கை: அதன்படி, ‘‘இந்த குடியிருப்பு பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் நடமாட்டம் சர்வசாதாரணமாக உள்ளது. சிறுவர்களுக்கும்கூட கஞ்சா தாராளமாக கிடைக்கிறது’’ என வழக்கறிஞர் ஆணையர் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘இந்தபகுதிகளில் போதை மறுவாழ்வுமையம் அமைக்க வேண்டுமென வழக்கறிஞர் ஆணையர் தனதுஅறிக்கையில் சுட்டிக்காட்டியிருந் தும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? தமிழகத்தில் எல்லா இடங்களிலும் போதை பொருட்கள் தாராளமாகக் கிடைப்பது போலீஸாருக்கு தெரியுமா, தெரியாதா?

பள்ளி குழந்தைகள் அதிகம் பாதிப்பு: போதை நடமாட்டத்தால் பள்ளிக்குழந்தைகள்தான் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். எனவே போதை பொருள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி அமைப்பு உள்ளதா அல்லது சுதந்திரமான வேறு ஒரு அமைப்பிடம் ஒப்படைக்கலாமா?’’ என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு தரப்பில், ‘‘தமிழகத்தில் போதை பொருட்களின்நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள் ளது. குற்றங்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துள்ளது. பெரும்பாக்கம், கண்ணகி நகர்பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் போலீஸார் பணியமர்த்தப்பட் டுள்ளனர். வழக்கறிஞர் ஆணையர் அறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும்’’ என தெரிவி்க்கப்பட்டது.

செப்.9-க்கு தள்ளிவைப்பு: அதையடுத்து நீதிபதிகள், ‘‘சென்னைக்குள் இருந்த குடிசைவாசிகளை மறுகுடியமர்த்தியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட் டுள்ள அடிப்படை வசதிகள் குறித்துமாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவும், தாலுகா சட்டப்பணிகள் ஆணைக்குழுவும் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை செப்.9-க்கு தள்ளி வைத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE