“அதிமுகதான் காணாமல் போகிறது” - செல்லூர் ராஜூவுக்கு சு.வெங்கடேசன் எம்.பி பதில்

By சுப.ஜனநாயகச் செல்வம்

மதுரை: மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட துவரிமானில் இன்று நடந்த நன்றி அறிவிப்பு பிரச்சாரத்தில் பேசிய மதுரை எம்பி சு.வெங்கடேசன், “கம்யூனிஸ்ட்டுகள் அழிய மாட்டார்கள். அதிமுகதான் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது” என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவுக்கு பதிலளிக்கும் வகையில் பேசினார்.

மதுரை துவரிமானில் சில நாட்களுக்கு முன்பு நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு எம்எல்ஏ பேசுகையில், “திமுக அரசு 3 ஆண்டுகளில் எந்த திட்டமும் மக்களுக்கு செய்யவில்லை. மக்களுக்காக போராட வேண்டிய கம்யூனிஸ்ட் கட்சியும் திமுகவிற்கு ஆதரவாக செயல்படுகின்றனர். கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொள்கை எதுவுமில்லை. கம்யூனிஸ்ட் கட்சியை கலைத்து விட்டு திமுக கிளை செயலாளராக பதவிக்கு வரலாம்” என்று பேசினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் மதுரை துவரிமானில் இன்று நடந்த நன்றி அறிவிப்பு கூட்டத்தில் எம்.பி சு.வெங்கடேசன் பேசியது: “மதுரை மாநகர பகுதியில் பேசியபோது கோபப்படாத செல்லூர் கே.ராஜூ, துவரிமானில் கோபப்பட்டதற்கு காரணம் மக்கள் வைத்த நன்றி பதாகை தான்.

விபத்துகள் அதிகம் நிகழும் மதுரை திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் துவரிமான் சந்திப்பில் உயர்மட்ட பாலம் கட்ட மத்திய அமைச்சரிடம் பேசி ரூ.46 கோடியில் நிதி பெற்றுத் தந்தது தான் காரணம். செல்லூர் ராஜூ அண்ணன், கம்யூனிஸ்டுகள் அழிந்து விடுவார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். கம்யூனிஸ்டுகள் அழிய மாட்டார்கள். எம்பி தேர்தலில் தேர்தலில் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் மக்கள் வெற்றி பெறச் செய்துள்ளனர்.

அதிமுக தான் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. மதுரை தொகுதியில் அதிமுக 3வது இடத்திற்கு சென்றுள்ளது. பாசிச பாஜகவை எதிர்க்காத எந்த மாநில கட்சியும் கரைந்து காணாமல் போகும். அதுதான் கடந்த அரை நூற்றாண்டு இந்திய அனுபவம். பாஜக தமிழகத்தை வஞ்சிக்கிறது, தமிழக உரிமைகளை பறிக்கிறது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட தற்போது வரை பிரச்சினையாகவே உள்ளது. மதுரை மெட்ரோ பணிக்கு பணம் தர மறுக்கின்றனர். இப்படி தமிழகத்தின் உரிமைகள் பறிக்கும் பாஜகவை எதிர்த்து போராடி உங்களது கட்சியை வளர்க்க பாருங்கள்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE