குரூப்-4 தேர்வு முடிவுகள் அக்டோபரில் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

By ஜெ.கு.லிஸ்பன் குமார்

சென்னை: கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வு முடிவு அக்டோபரில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், பில் கலெக்டர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், பாரஸ்டர் உள்பட பல்வேறு பதவிகளில் காலியாகவுள்ள 6224 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு கடந்த ஜூன் 9-ம் தேதி நடத்தப்பட்டது. டிஎன்பிஎஸ்சி நடத்திய இத்தேர்வை 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி எஸ்எஸ்எல்சி என்ற போதிலும் தேர்வெழுதியவர்களில் பெரும்பாலானோர் பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

குரூப்-4 தேர்வின் முடிவு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்டும் என டிஎன்பிஎஸ்சி ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், தேர்வு முடிவுகள் அதற்கு முன்பாகவே வெளியிடப்படுகின்றன. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி சமூகவலைத்தளத்தில் இன்று (செப்.3) மாலை வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த ஜூன் 9-ம் தேதி நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வின் முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும்” என கூறப்பட்டுள்ளது.

குருப்-4 தேர்வு முடிவு முன்கூட்டியே வெளியிடப்படுவதால் தேர்வெழுதியவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேர்வு முடிவுகள் 3 மாதங்களுக்கு முன்னரே வெளியாவதால் அரசு பணியில் விரைவில் சேர முடியும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE