ஜாபர்சேட்டுக்கு எதிரான ED வழக்கில் தீர்ப்பை தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தனக்கு எதிராக அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட் தொடர்ந்த வழக்கை மறுவிசாரணை செய்த நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர்.

கடந்த 2006-2011ம் ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில், சென்னை திருவான்மியூரில் வீட்டு வசதி வாரிய வீட்டுமனையை முறைகேடாகப் பெற்று வணிக ரீதியில் லாபம் ஈட்டியதாக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியான ஜாபர்சேட் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2011-ம் ஆண்டு ஊழல் வழக்கை பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில், சட்ட விரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ், ஜாபர் சேட் மீது அமலாக்கத்துறையும் தனியாக கடந்த 2020-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஜாபர் சேட் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு ஜாபர் சேட் மீதான வழக்கை ரத்து செய்வதாக வாய்மொழியாக ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் மேலும் சில விளக்கங்களைப் பெறுவதற்காக மீண்டும் மறுவிசாரணை நடத்தப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த அமர்வே மீண்டும் இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது என கோரியும் ஜாபர் சேட் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிமை மறுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என். ரமேஷ், “எந்த அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச்சட்டத்தின் கீழ் ஜாபர்சேட் மீது குற்றம் சுமத்தப்பட்டது என்பதும், இந்த வழக்கில் இறுதி வாதம் முடிந்து விட்டது எனக்கூறுவதும் தவறு. தொழில்நுட்ப காரணங்களுக்காகவே ஜாபர்சேட் மீதான மூலவழக்கு ரத்து செய்யப்பட்டது” என வாதிட்டார்.

அதற்கு ஆட்சேபம் தெரிவித்த ஜாபர் சேட் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டி.மோகன், “இந்த வழக்கில் ஏற்கெனவே இறுதி உத்தரவு பிறப்பித்த பிறகு அதை திரும்பப்பெற முடியாது. இணையதளத்தில் வெளியான அந்த உத்தரவு நகல் திடீரென மாயமாகி விட்டது. மனுதாரர் மீதான வழக்கை ரத்து செய்துவிட்டு, தற்போது மீண்டும் விசாரிக்கிறோம் என்றால் அதை எப்படி ஏற்றுக்கொள்வது?

இந்த சூழலில் மீண்டும் மறுவிசாரணை நடத்த முடியாது. இந்த வழக்கை இந்த அமர்வு மீண்டும் விசாரிக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம்” என்றார். அதற்கு நீதிபதிகள், “நாங்கள் பிறப்பித்த உத்தரவில் திருப்தி இல்லை என்றால் அதை தன்னிச்சையாக திரும்ப விசாரிப்பதற்கு அதிகாரம் உள்ளது. மேலும், அந்த உத்தரவில் நாங்கள் இன்னும் கையெழுத்திடவும் இல்லை” என்றனர். இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE